சென்னை: பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் வகையிலும் கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தையும் இன்று (04.01.2023) பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், "பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான குறைகளை இணையவழியாகப் பதிவு செய்திட ஏதுவாக இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் 'குறைகளை பதிவிடுக' எனும் வசதியும், 044 – 28339999 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் குறைகேட்பு மையம் கடந்த மே 25, 2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இம்மையத்திற்கு வரப்பெற்ற புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் செயல்பாட்டினை விரிவுபடுத்திடும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோயில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை குறைகளைத் தெரிவிக்கும் வகையிலும் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையும், 24 மணி நேர உதவி மையத்தின் சேவையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இம்மையத்தில் பெறப்படும் புகார்களுக்குப் புகார் எண் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுவதோடு, மனுதாரருக்குக் குறுஞ்செய்தி மூலம் ஒப்புகையும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்சமயம் பக்தர்களிடமிருந்து வரப்பெறும் ஆலோசனைகள் மற்றும் புகார்களை ஏற்று ஒரே நேரத்தில் அழைப்புகள் வந்தாலும் பதிலளிப்பதற்கு 5 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.
இம்மையத்தின் செயல்பாடுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் ஆய்வு மேற்கொள்வர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏற்கனவே குறைகளைத் தெரிவிக்க அறிவிக்கப்பட்டிருந்த 044 – 2833 9999 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டாலும் குரல் சேவையின் மூலம் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தெரிவித்து, அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.