தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரம் பிரிக்காமல் குப்பையைக் கொட்டினால் அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு ரூ. 100, அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ரூ. 1,000, பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் என்றால் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

waste
waste

By

Published : Oct 14, 2021, 1:49 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறுவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதாகவும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலிருந்து கட்டட கழிவுகள் பொது இடங்களிலும், சாலைகளின் ஓரங்களிலும் கொட்டப்படுவதாகவும் மாநகராட்சிக்குப் பல்வேறு புகார்களின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பொது, தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீதும் - கட்டுமான கழிவுகளைப் பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்கள் மீதும் - நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீதும் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 209இன்படி கீழ்கண்டவாறு அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி பொது, தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

தரம் பிரிக்காமல் குப்பையைக் கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ரூ.1,000, பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் என்றால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மேலும் பொது இடங்களில் கட்டுமானம், இடிபாடான கழிவுப்பொருள்கள் ஒரு டன் அளவில் கொட்டினால் ரூ. 2,000, ஒரு டன்னிற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

தோட்டக் கழிவுகள் மரக் கழிவுகளைப் பொதுவிடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ. 200, கழிவுநீர்ப் பாதை /கால்வாய், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்படும்.

மேலும் திடக்கழிவுகளை தனியார் இடங்களில் எறிந்தால் ரூ. 500, பொது இடங்களில் எறிந்தால் ரூ. 1000 அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாள்களில் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 நபர்களிடமிருந்து மூன்று லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாயும், பொது இடங்களில் கட்டுமான பொருள்களைக் கொட்டிய 123 நபர்களுக்கு மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் என மொத்தமாக ஆறு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குப்பை, கட்டுமான கழிவுகளை பொது இடங்கள், நீர்வழித் தடங்களில் கொட்டுவதைத் தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details