சென்னை:சென்னைமெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுர மீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் நத்தம் நிலமான அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட 5 பேருக்கு தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்குச் சொந்தமான நிலமல்ல எனவும் அந்த நிலத்தில் வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக் கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு தரும் பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், குறிப்பிட்ட அந்த நிலம் ஆதி திராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்குப் பட்டா ஏதும் வழங்கப்படவில்லை. நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும் என்ற நிலையில் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதால் நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.