கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவால், தமிழ்நாடு அரசு, ஆயிரம் ரூபாய் நிதியும், ரேஷன் பொருள்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, இதனை வழங்கக்கோரி வழக்குரைஞர் ராஜேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து, 96 விழுக்காடு பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறையாததால் மே மாதம் ரேஷன் பொருள்கள் வழங்கும் போதும், கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.