சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 10) ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் குறித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "சட்டமன்ற விதிகளை தளர்த்தி தீர்மானத்தைக் கொண்டு வருகிறீர்கள் என அதிமுகவினர் எங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஆனால் சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்ததே அதிமுகவினர் தான். சட்டமன்ற விதிகளை தளர்த்தி தான் முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் பாய்ந்தார்கள்.
அதே சட்டமன்ற விதியை இன்று நாங்கள் தளர்த்தும்போது அதிமுகவினர் பத்தினிகளாக மாறிவிட்டனர். கனத்த இதயத்தோடு தான் ஆளுநர் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றார் முதலமைச்சர். கவர்னர் பதவி என்பது தேவையில்லை என்பதை, எங்கள் கட்சி தோன்றிய போதே பிரகடனப்படுத்தி இருக்கிறது. நாங்கள் எல்லாம் ஆளுங்கட்சியாக வருவோம் என தெரியாத காலத்திலேயே, ஆளுநர் பதவி நாட்டுக்கு தேவை இல்லை என்று தெரிவித்தது திமுக. மாநில அரசாங்கங்களை ஆட்டிப்படைப்பதற்காக மத்திய அரசு ஆளுநர்களை ஒரு ஏஜென்டாக நியமிக்கிறார்கள்.
இந்தியாவில் பல மாநிலங்களில் குழப்பம் ஏற்பட்டதற்கு ஆளுநர்கள் தான் காரணமாக இருந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து ஹிந்து நாளிதழ் தலையங்கம் எழுதியது. மாநிலங்களின் நிலைமை தெரியாமல் கூறுகெட்ட தனமாக பேசினால் இப்படித்தான் வரும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கேட்டாவது திருந்தினாரா?; இல்லை. மேற்கு வங்கத்திலே அங்கிருந்த கவர்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியோடு தொடர்ந்து தகராறு செய்து வந்தார். அதன் விளைவாக அவர் ராஜ்யசபா தலைவர் ஆகிவிட்டார்.