சென்னை:நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகன் இறந்து போன துக்கம் தாங்காமல் நேற்று நள்ளிரவு அவரது தந்தை செல்வசேகரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து வெளியே எடுத்துவரப்பட்ட செல்வ சேகரின் உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் தொடர்ந்து பல்வேறு மாணவச் செல்வங்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். தனது மருத்துவ கனவு பறிபோனதால் சகோதரர் ஜெகதீஷ்வரன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுவரை மாணவர்களை தான் பறிகொடுத்து இருந்தோம் தற்போது மாணவச் செல்வங்களைச் சேர்ந்த குடும்பங்களையும் பறிகொடுத்து கொண்டிருக்கிறோம். செல்வ சேகரன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கு தெம்பு கிடையாது. ஒவ்வொரு வருடமும் இந்த நீட் தேர்வால் மாணவர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
நான் அரசியல் பேச விரும்பவில்லை இருந்தாலும் தயவு செய்து தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன நிலையை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். ஒரு முறை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார் மறுமுறை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் வேறு வழி இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். விரைவில் அதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் வேண்டுகோளின்படி தயவு செய்து யாரும் இது போன்ற தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். மீண்டும் ஒன்றிய பாஜக அரசிடம் நான் கேட்டுக் கொள்வது இந்த நீட் தேர்விலிருந்து தயவு செய்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆளுநர் பேசும் போதே பலி கொடுத்து இருக்கிறோம். ஆளுநர் மாளிகையில் மாணவர் பெற்றோரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் ஆளுநர் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ரவி வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை. நான்கு ஐந்து வருடங்களில் 20 உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆளுநர் அதை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் அழுத்தத்தின் பேரில் மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஒன்றிய பாஜக அரசு தான் இதற்கு சரியான முடிவை எடுக்க வேண்டும்.