தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. இந்நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அதனை மீறினால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டை பொறுத்தவரை கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று விழுக்காடு, இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது ஏப்ரல் 2021 இல் சராசரியாக தினமும் 3,900க்கும் அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தகுந்த இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16.3.2021 முதல் இதுவரை விதிகளை மீறியதாக 1,36,667 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து 2,88,90,600 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.