தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டாம்' - திருப்பி அனுப்பிய ஆசிரியை

இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டாம் என கூறி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியை ஒருவர், பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

By

Published : Jan 14, 2023, 8:54 AM IST

பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டாம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டாம்

சென்னை:திமுக 2021ஆம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அரசாணை 149 எனும் மறு நியமனத் தேர்வை ரத்து செய்து, 2013 முதல் காத்திருக்கும் TET ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என்பதை நிறைவேற்றக்கோரிக்க வைத்த இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டாம் என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியை அ. ஸ்ரீரத்னா அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை ஸ்ரீ ரத்னா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “நான் இந்தாண்டு (2023) தங்களின் திராவிட அரசால் வழங்கப்பட்ட இலவச பொங்கல் பரிசு பொருட்களான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் தொகை ரூ .1000 ஆகியவை பெற்றேன். நீங்கள் இலவசம் என்று எனக்கு கொடுக்கும் யாவும் எனது வரிப்பணம் தான். இருந்த போதிலும், அதை இலவசம் எனும் பெயரால் எனது சுயமரியாதையை இழந்து பெறுவதை நான் விரும்பவில்லை.

இதேபோல் கடந்த வருடம் நான் பெற்ற இலவச பொங்கல் பரிசு தொகுப்பை உங்களுக்கு அனுப்பி, இலவசம் எனக்கு வேண்டாம், அதற்கு பதிலாக எனது உரிமையான அரசு பணியை எனக்கு கொடுங்கள் என கேட்டிருந்தேன். ஒரு வருட காலமாகியும் அதற்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் எங்களை இருப்பிடம் தேடி வந்து எங்களின் குறைகளை கேட்டு அறிந்தீர்கள். ஆனால், தற்பொழுது நீங்கள் இருக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கே வந்து தங்களின் உரிமை கேட்டு தொடர்ந்து போராடி வரும் மக்களின் குறை உங்கள் செவிகளை ஏனோ எட்டவில்லை.

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு கேட்டும், செவிலியர்கள் நிரந்தர அரசுப் பணிகேட்டும், இடைநிலை ஆசிரியர்கள் சம ஊதியம் கேட்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேலை கேட்டும், துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணி வாய்ப்பு கேட்டும், நீங்கள் பதவியேற்ற காலம் முதல் இன்று வரை தினம்தோறும் போராடி வருகின்றனர். அனைத்து போராட்டத்திற்கும் நீங்கள் இறுதியில் கொடுக்கும் பதில் அரசிடம் நிதி இல்லை என்பதே. இலவசம் கொடுக்க மட்டும் நிதி இருக்கும் திராவிட மாடல் அரசிடம் மக்களின் உரிமைக்கு செலவிட நிதி இல்லாமல் போனது வியப்பாயிருக்கிறது.

மக்களின் உரிமைக்கு செலவிட அரசிடம் நிதி இல்லை என்பதை விட அரசுக்கு மனமில்லை என்பதையே இந்த இலவசங்கள் எங்களுக்கு உணர்த்துகிறது. என் உடன் பிறந்தார்கள் உரிமை பசிபோக்க வழி கேட்டு வீதியில் இறங்கி போராடும் போது நீங்கள் கொடுக்கும் இலவச பொருட்களால் நான் பசியாறுவதா? எங்கள் உரிமை அரசுப் பணியே.

நான் கடந்த 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 9 வருடங்களாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நீங்கள் 2021 தேர்தல் வாக்குறுதி அளித்தது போல அரசாணை-149 எனும் மறு நியமனத் தேர்வை ரத்து செய்து, 2013 முதல் காத்திருக்கும் TET ஆசிரியர்களுக்கு பணி வழங்குவேன் என கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். இந்த இலவசங்கள் எனக்கு வேண்டாம். நான் போராடுவது எனது உரிமைக்காக, இலவசங்களுக்காக அல்ல” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details