சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாட்டில், தேசிய அளவிலான மிகச்சிறந்த சட்டக்கல்வி வழங்கும் பொருட்டு, 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் தோற்றுவிக்கப்பட்டு 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் தற்சமயம் 521 மாணவர்கள் சட்டக்கல்வி பயின்று வருகின்றனர்.
அகில இந்திய ஒதுக்கீடு
தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையானது பொது சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (Common Law Admission Test - CLAT) மூலம் நடைபெறுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கென ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்களுள் 45 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களாலும் (Resident students of Tamil Nadu), 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் (All India Quota) அடிப்படையிலும் மற்றும் 5 விழுக்காடு இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI Quota) ஒதுக்கீட்டின்கீழும் பூர்த்தி செய்யப்படுகிறது.
பட்டியல் சாதி
தமிழ்நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கான (45%) இடங்களைப் பொறுத்தமட்டில், அவை தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கொள்கையினைப் பின்பற்றி பூர்த்தி செய்யப்படுகிறது. 50 விழுக்காடு அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பொறுத்தமட்டில் 15 விழுக்காடு இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் (SC) 7.5 விழுக்காடு இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் (ST) மீதமுள்ள 77.5 விழுக்காடு இடங்கள் பொதுமுறைப் போட்டியிலும் (Open Competition) பூர்த்தி செய்யப்படுகின்றன.