தமிழ்நாடு

tamil nadu

5ஆவது நாளாக தொடரும் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் கடும் அவதி

By

Published : Oct 29, 2019, 2:48 PM IST

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

government-doctors-protest

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் 5 மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்ததோடு, கடந்த 25ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பங்கேற்றிருந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மருத்துவர் சுரேஷ் என்பவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களுக்கு பதிலாக இரண்டு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் கையொப்பம் போடாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியிருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைகளை மட்டுமே அளித்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

5ஆவது நாளாக தொடரும் அரசு மருத்துவர்கள் போராட்டம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், ‘தமிழ்நாட்டில் பணியில் உள்ள சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி பல்வேறு வகையான, ஜனநாயக முறையிலான போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.

அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வை பணியில் சேர்ந்த 13ஆவது ஆண்டில் வழங்க வேண்டும். மருத்துவர்கள் பணியிடங்களை குறைக்கும் அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்புகளிலும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தி பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினோம்.

5ஆவது நாளாக தொடரும் அரசு மருத்துவர்கள் போராட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டோம். மேலும் 6 மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டோம். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லண்டன் செல்லும் அவசரத்தில் எங்களை அழைத்துப் பேசினார்.

ஆனால் தற்போது மருத்துவர்களின் ஆதரவற்ற அவரின் ஓர் அங்கமாக செயல்படும் அரசு மருத்துவர் சங்கத்தினை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை கேவலமாக எண்ணினாலும் பரவாயில்லை. ஆனால் அரசாணைப் படியும், எங்களுக்கு வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால் எங்களை போராட்டத்திற்கு அரசுதான் தள்ளியது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கடமை எங்களுக்கு இருப்பது போல் அரசுக்கும் உள்ளது’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க...

தீபாவளியன்று டாஸ்மாக்கில் கோடிகளைக் கொட்டிய வேலூர் ‘குடிமகன்’கள்!

ABOUT THE AUTHOR

...view details