சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (51). இவர் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், மல்லிகாவின் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மல்லிகா கீழே விழுந்ததால் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை காவல் நிலைய காவலர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.