தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2022, 9:52 PM IST

ETV Bharat / state

குற்றச்செயலைத் தூண்டும் வகையில் கானா பாடல் இருக்கக்கூடாது: காவல் துறை எச்சரிக்கை

டம்மு, கிசா, சாமான் என இளைஞர்களை குற்றச்செயலுக்குத் தூண்டும் வகையில், கானா பாடல்கள் வெளியிடுபவர்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை எச்சரிக்கை
காவல்துறை எச்சரிக்கை

பெற்றோர்கள் குறித்தும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பது குறித்தும், வாழ்க்கை குறித்தும் எனப் பல சமூக பிரச்னைகளை எளிதாகப் புரியும் வகையில் வரிகளை உருவாக்கி வெளிவந்ததால் கானா பாடல்கள் வெற்றியடைந்தன.

நாளடைவில் 1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் கானா பாடல்கள் சினிமாவில் தோன்றி பெரும் வரவேற்பைப் பெற்று, அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

கானா பாடல்

இந்நிலையில் சமீபகாலமாக கானா பாடல்களின் ட்ரெண்டை மாற்றி சாண புடிச்ச கத்தி, கொலை கேசு, மிட்டாய் சாங், ரவுடி பாடல் என குற்றச்செயல்களைத் தூண்டும் வகையிலான பெயர்களை வைத்து, கானா பாடலை உருவாக்கி வருகின்றனர்.

இது போன்ற பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால், வெறும் சப்ஸ்கிரைபருக்காக மட்டுமே கானா பாடகர்கள் இதே போன்ற பாடல் வரிகளை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

'மூளைய மயக்கும் டம்மு'

குறிப்பாக 'சாணம் புடுச்ச கத்தி' என்ற கானா பாடலில், கத்தி மூலமாக கொலை செய்யும் காட்சிகளும், 'மூளைய மயக்கும் டம்மு' என்ற பாடலில் கஞ்சா புகைப்பது குறித்தும், மிட்டாய் என்ற கானா பாடலில் போதை மாத்திரைகளை சாப்பிட்டு கத்தியை எடுத்துச்சென்று பணம் பறிப்பது குறித்தான காட்சிகளும், வரிகளும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அடிதடி ரவுடி

மேலும் '75 vs 307' என்ற பாடலில் அடிதடி ரவுடிகளுக்கும், கொலை குற்றம் தொடர்பான ரவுடிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் பாடலாக அது அமைந்துள்ளது.

இளைஞர்களை குற்றச்செயல்களுக்குத்தூண்டும் வகையில், இது போன்ற கானா பாடல்கள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிசா என்றால் போதை, பெரிய டம்மு, கீரை, பொட்டலம் என்றால் கஞ்சா, மிட்டாய் என்றால் போதை மாத்திரை, ஐஸ், தலையணை என்றால் கூல் லிப், தடி என்றால் போலீஸ், பொருள், பொம்மை, சாமான் என்றால் கத்தி இது போன்ற வரிகளுடனே தற்போதுள்ள கானா பாடல்கள் வருகின்றன.

'சிறுமியை கர்ப்பமாக்கிவிடுவேன்'

ஏற்கெனவே 'சிறுமியை கர்ப்பமாக்கிவிடுவேன்' என ஆபாசத்தைப் பரப்பும் வகையில், கானா பாடல் பாடிய சரவெடி சரணை காவல் துறையினர் கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.

இதனைத்தொடர்ந்து அவதூறு, ஆபாசத்தை பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கானா பாடல்களை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கி உள்ளனர்.

பாடல்களை நீக்குமாறு அறிவுரை

இந்நிலையில் தற்போது கானா பாடல்களின் மகிமையை கெடுக்கும் வகையிலும், இளைய சமுதாயத்தை கெடுக்கும் வகையிலும் கானா பாடல்கள் வெளிவருவதால், அனைத்து கானா பாடகர்களையும் வரவழைத்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சர்ச்சையான கானா பாடல்களை நீக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டதாகவும், மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு - இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ABOUT THE AUTHOR

...view details