தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! - Chennai

Tamil Nadu Governor: ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருக்கா வினோத்திற்கு மூன்று நாள் போலீஸ் காவல்
கருக்கா வினோத்திற்கு மூன்று நாள் போலீஸ் காவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 6:57 PM IST

Updated : Oct 30, 2023, 8:02 PM IST

கருக்கா வினோத்திற்கு மூன்று நாள் போலீஸ் காவல்

சென்னை:கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு கடந்த 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசுவதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மூன்று பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, இந்தச் சம்பவத்தில் கருக்கா வினோத் மட்டும் தான் ஈடுபட்டார் என காவல்துறையினர் விளக்கம் அளித்து இருந்தனர்.

மேலும் கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ரவுடி கருக்கா வினோத்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கிண்டி காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதனால் கருக்கா வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக, புழல் சிறைத்துறை அதிகாரிகள் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைத்து வந்தனர்.

அப்போது காவல் வாகனத்தில் இறங்கிய ரவுடி கருக்கா வினோத், நீட் தேர்வை ரத்து செய் மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தை படி விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கோஷமிட்டவாறே சென்றார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் ஒன்பதாவது அமர்வு நீதிபதி சந்தோஷ் முன்பு கருக்கா வினோத் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று, கருக்கா வினோத்தை மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து கிண்டி காவல் துறையினர், மேலும் மூன்று நாட்கள் விசாரணை மேற்கொள்வதற்காக கருக்கா வினோத்தை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் துறையினரின் விசாரணை எங்கு நடக்கவிருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் காவல் துறை தரப்பிலிருந்து அளிக்கவில்லை.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்!

Last Updated : Oct 30, 2023, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details