காஞ்சிபுரம் பாஜக சார்பில் வெள்ளைகேட் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. அதில், பாரதிய ஜனதா மாநிலச் செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
இந்தப் பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். மேலும் பரதநாட்டியங்கள், கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை கங்கை அமரன் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேசிய கட்சிகள் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது. எந்தப் பொருள் வேண்டும் என்றாலும் மத்திய அரசிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரியாத்தனமாகக் கூறிவிட்டார். தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநிலக் கட்சிகள் இருக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஒருவேளை அவர் தனிக்கட்சி தொடங்குவதற்காக இப்படி பேசுகிறாரோ என்னவோ எனத் தெரியவில்லை.
அதிமுகவின் தலைமையான ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை சரியாகத்தான் இருக்கிறார்கள். தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இயங்க முடியும் என்றால் தேசிய கட்சிகளை வேண்டாம் என்று கூறியிருக்கலாம். அவர் அவ்வாறு கூறவில்லை. வாழைப்பழம் காமெடிபோல உள்ளது.
இந்தத் தேர்தலில் தாமரை மலரும். பாரத ரத்னா விருதுபெறுவதற்கான பட்டியலில் பாடகர் எஸ்.பி.பி. பெயரும் இருக்கிறது. என்னாலான முயற்சிகளைத் தற்போது அதற்காகச் செய்துவருகிறேன். பாஜக தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு முன் மாதிரியாகத் திகழ்வார்கள்" என்றார்.