சென்னை: சென்னை தியாகராய நகர் ஆர்பி கார்டன் பகுதியை சேர்ந்த முத்துகுமார் (42) என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று(மே.3) இரவு முத்துகுமார் தனது பெண் தோழியுடன் பேசி கொண்டு கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், முத்துகுமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறிக்க முயன்றனர். முத்துகுமார் செல்போனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கத்தியால் முத்துகுமாரின் தலையில் வெட்டி விட்டு, அவரது செல்போன் மற்றும் உடனிருந்த பெண்மணியின் செல்போனையும் பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டது.
இதையடுத்து முத்துக்குமாரின் தோழி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த பாண்டிபஜார் போலீசார், காயமடைந்த முத்துகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.