சென்னை:மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 1987ம் ஆண்டு பயிற்சியாளராக சேர்ந்த கணேசன், பின் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்துக்குப் பணி மாறுதல் பெற்று, பதவி உயர்வு பெற்று, அறிவியல் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பணியில் சேர்ந்த போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், பட்டியலினத்தவர் என போலி சாதிச் சான்று அளித்து, வயது வரம்பு சலுகை பெற்றதாக பட்டியலின மற்றும் பழங்குடியினர் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை இடைநீக்கம் செய்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறைரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி கணேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பல ஆண்டுகள் பணியில் இருப்பதையும், பிரதமர் விருது பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டி, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறைரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க 2013ல் உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவர் விருது பெற்றதால் பயன்:இந்த உத்தரவை எதிர்த்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநர், 2020ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சபீக் அமர்வு, தீர்ப்பாயம் உத்தரவிட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாகச் சம்பளம் பெற்றுள்ளதையும், குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளதையும் கருத்தில் கொண்டு கணேசனுக்கு கட்டாய ஓய்வு மட்டுமே வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
40 % பென்சன் மட்டுமே அனுமதி:மேலும், அவருக்கு 40 சதவீதம் மட்டும் பென்ஷன் வழங்க வேண்டும் எனவும், வருங்கால வைப்பு நிதி தவிர வேறு எந்த ஓய்வுக்கால பலன்களும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் உரிய நேரத்தில் நீதிமன்றத்தை நாடியிருந்தால் கணேசனுக்கு 40 சதவீத ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்காது என தெரிவித்த நீதிபதிகள், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் துறைரீதியான விசாரணையை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - மே 6ஆம் தேதி ஒத்திவைப்பு