தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உல்லாசமாக வாழலாம் வாங்க - ஆசையில் சிக்கியவர்கள் புகார்..! - Chennai district news

சென்னை தியாகராய நகரில் செயல்படும் கிளப் ஒன்றில் பணம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினரானால் சகல வசதிகளும் இலவசம், பெண்களோடு உல்லாசமாக இருக்கலாம் எனக் கூறி பண மோசடி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

உல்லாசமாக வாழ்க்கை
உல்லாசமாக வாழ்க்கை

By

Published : Aug 9, 2021, 10:02 AM IST

Updated : Aug 9, 2021, 11:10 AM IST

சென்னை: அபிபுல்லா சாலையில் இயங்கிவருகிறது சிட்டி கிளப் எனும் சக்தி ரீ கிரியேஷன் சென்டர். இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இணைந்தால் பார், ஸ்பா, தங்கும் விடுதி, உடற்பயிற்சி கூடம், குடும்ப சுற்றுலா என பல வசதிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு ஆயுட்கால உறுப்பினராக இணைய 40 ஆயிரம் ரூபாய்வரை பணம் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், "இந்த கிளப்பில் இருந்து தொடர்புகொண்ட நபர்கள் 5000 ரூபாய் செலுத்தி கிளப்பில் சேர்ந்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் சலுகை வழங்கப்படும் எனவும், அதன்படி பணம் செலுத்த சென்ற தன்னிடம் தனது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டனர்.

சமரசம் பேசும் காவல்துறை

முறையாக எந்த சலுகையோ, வசதியோ செய்து கொடுக்கவில்லை எனவும், செலுத்திய பணத்தை கேட்டதற்கு, மேலும் பல சலுகைகள் இருப்பதாகவும் பல்வேறு ஆசைவார்த்தை கூறி ஒரு லட்சம் ரூபாய்வரை வசூலித்து கொண்டு தொடர்ந்து ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து பாண்டி பஜார் காவல் துறையினரிடம் புகார் அளித்த போதும், புகாரை விசாரிக்கவில்லை.

மேலும், குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சமரசம் செய்து கொள்ளும் வகையில், கிளப் நிர்வாகம் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமெனவும் இல்லையெனில், சிவில் வழக்கு என்று நீதிமன்றத்தை நாடுமாறு கூறி புகாரை முடித்து வைக்க உள்ளதாகவும் தெரிவிப்பதாக தீனதயாளன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோன்று பாதிக்கப்பட்ட சங்கர் என்பவர், 31 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி கிளப்பில் உறுப்பினராக சேர்ந்ததாகவும், இதற்கு பல சலுகைகள் வசதிகள் உண்டு எனக் கூறி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை அம்பலப்படுத்தும் வகையில் அபிபுல்லா சாலையில் உள்ள கிளப்பிற்கு நேரடியாகச் சென்று பெண் நிர்வாகிகளுடன் பேசும் போது ஆடியோ பதிவு செய்துள்ளார்.

அதில் ஆயுட்கால உறுப்பினராக சேரும்படியும் பிளாட்டினம் கார்டு வழங்கப்படும் எனவும் பெண் நிர்வாகி ஆசை வார்த்தை காட்டி பேசும் ஆடியோ பதிவாகியுள்ளது. குறிப்பாக க்ளப்பிலும் அல்லது கிளப்புக்கு சொந்தமான இடங்களிலும் பெண்களோடு உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறும் ஆடியோவும் பதிவாகியுள்ளது.

ஆசை வார்த்தை கூறி மோசடி

தியாகராய நகரிலும் வடபழனியிலும் கிளப்புக்கு சொந்தமான இடங்களில் கிளப் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களோடு சர்விஸ் என்ற பெயரில் மசாஜ் செய்து கொள்ளலாம் எனவும், உல்லாசமாக இருந்து கொள்ளலாம் எனவும், கிளப்பின் பெண் நிர்வாகி ஆசை வார்த்தை காட்டி பேசுவதும் பதிவாகியுள்ளது

மேலும் ஈசிஆரில் உள்ள சொகுசு விடுதியிலோ அல்லது பட்டினப்பாக்கத்தில் கிளப்புக்கு சொந்தமான இடத்திலிருந்து சர்வீஸ் என்ற பெயரில் பெண்களோடு உல்லாசமாக இருக்க வேண்டுமென்றால் லிங்க் ஒன்றை வாடிக்கையாளருக்கு அனுப்புவதாகவும், அதன் மூலம் பெண்களை தேர்ந்தெடுத்துக் வரவழைத்துக்கொண்டு உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறி பணத்தை பறிக்க முயல்வதாக சங்கர் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்

இதுதொடர்பாக சம்மந்தபட்ட கிளப் நிர்வாகத்திடம் கேட்டபோது, கிளப்பின் விதிகள் தெரிந்து தான் பணம் செலுத்துகிறார்கள். பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாது என கூறுகின்றனர். மேலும் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கிளப்பில் எதுவும் நடக்கவில்லை என்கின்றனர்.

இருப்பினும் புகார்தாரர்கள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசுவதால், காவல்துறை உயர் அலுவலர்கள் விசாரிப்பதன் மூலம் உண்மை வெளியே வரும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கப்பல் மீது விசைப்படகு மோதி விபத்து - மீனவர் மாயம்

Last Updated : Aug 9, 2021, 11:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details