தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன? - World Cup Cricket 2023 Live

Etv Bharat Tamil Exclusive World Cup 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தும், அதில் இந்திய அணி எதிர்கொள்ளும் சாதக பாதகங்கள் குறித்தும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சடகோபன் ரமேஷ், ஈ.டிவி பாரத் செய்தியாளர் ஆ.கிறிஸ்டோபரிடம் கலந்துரையாடியது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு!...

Cricket
Cricket

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 3:47 PM IST

Updated : Oct 4, 2023, 4:42 PM IST

Former Crickter Sadagopan Ramesh predicts india wiil enters Semi finals in World Cup Cricktet 2023

சென்னை :2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை (அக். 5) தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம் இந்திய ரசிகர்களிடையே ஒட்டிக் கொண்ட நிலையில், தொடர் தொடங்க 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ளது. இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், நாக் அவுட் ஆட்டங்களில் சொதப்பக் கூடிய அணிகள் எவை, சஞ்சு சாம்சன் விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சடகோபன் ரமேஷ் ஈ.டிவி பாரத் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.

உலக கோப்பை யாருக்கு? இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி? :2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை செல்ல வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் நன்றாக விளையாடி உள்ளனர். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், நல்ல பார்மில் உள்ளனர்.

அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்து உள்ளார். உள்நாட்டில் இந்திய அணி விளையாடுவது மிகப் பெரிய பலம். இந்திய அணி அரையிறுதி போட்டி வரை செல்லும் என உறுதியாக நம்பலாம். இந்தியாவை தவிர்த்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள், ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறது.

அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. நாக் அவுட் சுற்றுகளை தவிர்த்து, ஐசிசியின் அனைத்து வடிவிலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். 50 ஓவர்கள் கிரிக்கெட் பார்மட்டை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

அரையிறுதிக்கு பின்னர் தான் அணிகளின் பலம், பலவீனம் தெரியவரும். கோப்பை வெல்வது என்பது அன்றைய தினம் முடிவு செய்யக் கூடியது. அன்றைய நாளில் நன்றாக விளையாடக் கூடிய வீரர்கள், முக்கியமான மற்றும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் போகும் சூழலில் அது எதிரணிக்கு நல்ல வாய்ப்பாக அமையக் கூடும்.

எனவே அரையிறுதியில் இருந்து தான் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய ஆட்டங்கள் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 20 முதல் 40 ஓவர்கள் வரையிலான மிடில் ஓவர்கள் தான் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கின்றன. அதற்கேற்ற வகையில் விளையாடும் அணிகள் நிச்சயம் ஜொலிக்கும். அதேநேரம் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள் கொண்ட அணிக்கு கூடுதல் பலம்.

நாக் அவுட் சுற்றில் தென் ஆப்பிரிக்கா பாணியில் நியூசிலாந்து உள்ளதா? :கடைசி இரண்டு உலக கோப்பைகளுக்கு முன், அரையிறுதி வரை சென்ற நியூசிலாந்து அணி, அதன்பின் இறுதி போட்டிகளை எட்டி இருப்பது, நாக் அவுட் சுற்றுகளின் பதற்றத்தை கையாளும் திறனை அந்த அணி வீரர்கள் பெற்று இருப்பதை காண முடிகிறது. அது அந்த அணிக்கு முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி நன்றாக விளையாடி வருவதை பார்க்கையில், நடப்பு உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து இருக்கும் எனத் தெரிகிறது. கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். மேலும் நியூசிலாந்து அணியில் நல்ல பந்துவீசக் கூடிய வீரர்கள் அதிகம் இருப்பது கவனிக்கத்தக்கது.

சுழற்பந்து வீச்சில் எளிதில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய பவுலர்களின் கெடுபிடி எப்படி இருக்கும்? :இந்தியாவில் மட்டுமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் காரணத்தால் பல்வேறு அணிகள் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்கக் கூடிய மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தங்கள் அணிக்கு தேர்வு செய்து உள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வேல் சுழற்பந்து வீச்சை எளிதில் எதிர்கொள்ள கூடிய வீரர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளக் கூடிய வீரர்களை பல்வேறு அணிகள் தேர்வு செய்து இந்தியாவுக்கு அனுப்பி உள்ளன. அப்படி இருக்கையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமான சூழல் நிலவுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை குல்தீப் யாதவ், பிரதான சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். மேலும் அணியில் அஸ்வின் இணைந்து இருப்பது கூடுதல் பலம். குல்தீப் யாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தனித் திறமையான பந்து வீச்சாளர்கள், மூன்று பேரும் ஒவ்வொருவருடன் தனித்து சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுக்கக் கூடியவர்கள் என்பதால் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடிய மைதானங்களில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்ற யுவராஜ் சிங்கின் கருத்து என்பது :இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் உள்ளார். அவருக்க அடுத்தபடியாக இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் நெருக்கடி நேரத்தில் பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் விருப்பமாக உள்ளது.

அதன் அடிப்படையிலேயே, அஸ்வின் அல்லது அக்சர் பட்டேல் என்ற முடிவை இந்திய அணி நிர்வாகம் கையில் எடுத்தது. சாஹலை பொறுத்தவரை, குல்தீப் யாதவை போல் அவரும் முழுநேர சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே. அதேநேரம் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என ஆல் ரவுண்டராக விளையாடக் கூடியவர். அதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் தேர்வாக அஸ்வின் இருந்திருக்கக் கூடும்.

சஞ்சு சாம்சன் - இந்திய அணி உங்கள் கருத்து என்ன? :இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தான் வருகிறது. இஷான் கிஷன், கே.எல்.ராகுல் என இரண்டு வீரர்களை தாண்டி ஜொலிக்கும் பட்சத்தில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு நிரந்தர இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதற்கான திறமை சஞ்சு சாம்சனிடம் உள்ளது. அதேநேரம் திறமையை தாண்டி அவரது ஆட்டம் மெச்சும் அளவுக்கு இருக்குமா? எனக் கேட்டால் இல்லை என்பது தான் எனது பதில். அதேநேரம், காயம் காரணமாக ஓய்வில் உள்ள ரிஷாப் பண்ட் அணிக்கு திரும்பும் பட்சத்தில் அதன் போட்டி மேலும் அதிகரிக்கும் என்பதால் சஞ்சு சாம்சனின் இருப்பு என்பது இந்திய அணியில் கேள்விக் குறியாகவே தான் உள்ளது.

சென்னை மைதானம் எப்படி? அங்கு அஸ்வின் ஜொலிப்பாரா? :சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கக் கூடியது. வானிலை உள்ளிட்டவைகளை பொறுத்து இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் கவனம் பெறும். வானிலை உள்ளிட்ட அனைத்து கருத்துகளையும் ஒப்பிட்டு பார்த்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா முடிவு எடுப்பார்" இவ்வாறு சடகோபன் ரமேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க :Chepauk stadium: இந்திய கிரிக்கெட்டின் 'லக்கி சார்ம்' சேப்பாக்கம் மைதானம்! அப்படி என்ன இருக்கு?

Last Updated : Oct 4, 2023, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details