தமிழ்நாடு

tamil nadu

ஜெயக்குமார் கைது முதல் ஜாமீன் மனு தள்ளுபடி வரை: விவரம் உள்ளே!

By

Published : Feb 23, 2022, 10:37 PM IST

திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாகப் பதியப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சாலை மறியல் வழக்கில் மீண்டும் கைதான ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயக்குமார் கைது முதல் ஜாமீன் மனு தள்ளுபடி வரை
ஜெயக்குமார் கைது முதல் ஜாமீன் மனு தள்ளுபடி வரை

சென்னை:கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜெயக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திமுக பிரமுகர் நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மற்றொரு வழக்கில் மீண்டும் கைது

அதேபோல அரசு உத்தரவை மீறி, சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அதிமுகவினர் மீது ராயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் நேற்று முன்தினம் இரவு (பிப்.21) மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை இன்று (பிப்.23) காலை ராயபுரம் காவல்துறையினர் மீண்டும் கைது செய்து பூந்தமல்லி கிளைச் சிறையிலிருந்த ஜெயக்குமாரை அழைத்து சென்று ஜார்ஜ் டவுன் 16ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 15ஆவது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால், 16ஆவது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்துகொள்ள முடியாது எனக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருக்கும் நீதிபதி தவுலத்தம்மாளிடம் 16ஆவது மாஜிஸ்திரேட் தயாளன் விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி, ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கேட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக சாலைமறியலில் ஈடுபட்ட வழக்கில் ஆஜர்படுத்தபட்ட ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் மனு மீதான வாதம்

இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும். ஜெயக்குமார் மீது அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்குப் பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும். புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடவில்லை என வாதிட்டார்.

திமுக பிரமுகர் நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டம் படித்தவர். இது போன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளதை சுட்டிக்காட்டி அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள் என்றும்; அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார்.

கொலை முயற்சி என்ற வகையில்வழக்குப்பதிவு

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியதுடன் "சாவடிங்கடா" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், இது கொலை முயற்சி என்ற வகையில் வழக்கை 307ஆக மாற்றியுள்ளதாகவும், மேலும் ஜெயக்குமார் மீது தகவல்தொழில் நுட்பப் பிரிவு வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை. அதற்கான முகாந்திரமும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார்.

எதன் அடிப்படையில் 506 (2) பிரிவைச் சேர்த்தார்கள்? கொலை மிரட்டலே இல்லை என்றபோது கொலை முயற்சி எப்படி வரும் என்று ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டார்.

அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி தீர்ப்பை உணவு இடைவேளைக்குப் பிறகு ஒத்திவைத்தார். இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் கூடிய நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தேர்தலில் அதிமுக தோல்வி: அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details