சென்னை:சென்னையில் இருந்து சீரடி செல்லும் (ஸ்பைஸ் ஜெட்) தனியார் பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 2:20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சீரடி புறப்பட்டுச் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 154 பயணிகள் பயணிக்க இருந்தனர்.
அந்தப் பயணிகள் அனைவரும் பகல் ஒரு மணிக்கு முன்னதாகவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால் விமானம் கால தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு சோதனை போன்றவைகளுக்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் திடீரென சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் சீரடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த தனியார் விமான நிறுவனம் விமானம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ”விமானம் ரத்து என்பதை நீங்கள் நேற்று மதியமே சொல்லியிருந்தால் நாங்கள் பெங்களூரு வழியாக மாற்று விமானத்தில் சீரடி சென்றிருப்போம். ஆனால் கால தாமதம் என்று அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் விமானம் ரத்து என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்”. என்று வாதிட்டனர்.
மேலும் சீரடியில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்போனில் விசாரித்த போது அங்கு வானிலை தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர். எனவே எப்படியும் விமானத்தை இயக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து விமான நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.