சென்னை :இன்று அதிகாலை முதல் மீன்பிடித் தடைக் காலம் முடிவுக்கு வந்த நிலையில், காசிமேட்டில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜுன் 14ஆம் தேதி வரை, 60 நாள்கள் மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு, நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று(ஜுன் 15) நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இருக்கின்றனர். இதையடுத்து படகுகளில் மீன்பிடிக்கச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மீனவர்கள் நல முன்னணி சங்கத்தின் தேசிய தலைவர் மா கீ சங்கர், 'மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்தித் தரவேண்டும். மீனவர்கள் ஒருமுறை கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவதற்காக நான்கு ஆயிரம் லிட்டர் முதல் மாதத்திற்கு 16 ஆயிரம் லிட்டர் வரை டீசல் தேவைப்படுகிறது.
மீன்பிடித் தடைக் காலம் முடிவுக்கு வந்தது ஆனால், அரசு ஒரு மாதத்திற்கு ஆயிரத்து 800 லிட்டர் டீசல் மட்டுமே மானியமாக வழங்குகின்றனர். இதனால் மீனவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே, டீசல் மானிய அளவை உயர்த்தித்தரவேண்டும். தற்பொழுது தமிழ்நாடு அரசு அறிவித்த மீனவர்களுக்கான தடைகால மானியம் 8 ஆயிரம் ரூபாயில் தற்பொழுது ஐந்தாயிரம் வழங்கியுள்ளார்கள். மீதமுள்ள மூன்று ஆயிரம் மானியத் தொகையை உடனடியாக மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: நண்டலாறு தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை