சென்னை நெற்குன்றம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த 9ஆம் தேதி நான்கு கடைகளின் ஷட்டரை உடைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதன் மூலம் பிரபல கொள்ளையன் மார்க் என்கிற சிவா(29) கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த மார்க்கை, கோயம்பேடு குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மார்க்கிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.