சென்னை தாம்பரம் அடுத்த பார்வதி நகர் இளங்கோ தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன்(வயது 72). இவரது மனைவி அவையம்பாள் (வயது 65). இவர்களுக்கு 32 வயதில் ஒரு மகனும், 24 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
கடந்த 5 வருடங்களாக தனது மகள் மற்றும் மகன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல இடங்களில் வரன் பார்த்து வந்தனர். இதுவரை திருமணம் நடக்காததால் பெற்றோர்கள் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ராமச்சந்திரன் வீட்டுக்கு 25 வயது மதிப்புடைய ஒரு நபர் ஜோசியம் பார்ப்பதாக கூறி வந்துள்ளார். அப்போது அவர், உங்களுக்கு தோஷம் உள்ளது பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
சூனியம் வைத்திருக்கிறார்கள்
அதன் பிறகு ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வர சொல்லி பின்னர் சுமார் 1 மணி நேரமாக பூஜை நடத்திய பிறகு சொம்பிலிருந்து சிறு தகடு ஒன்றை எடுத்து காண்பித்து உங்கள் வீட்டிற்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
உடனே சூனியத்தை நீக்க வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று கூறியதும் அதை உடனே செய்யுங்கள் என்று தம்பதியினர் கூறியதால் அதற்கு ஜோசியர் 24 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என்று கூறியுள்ளார். உயிருக்கு பயந்த தம்பதியினர் 24 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் பணத்தை வாங்கிக்கொண்டு சிறிது நேரத்தில் பூஜை முடிந்ததாகக் கூறி ராமச்சந்திரனின் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு ஜோசியர் சென்றுள்ளார்.
தோஷம் இன்னும் கழியவில்லை
அதன்பிறகு கடந்த ஆறாம் தேதி தம்பதியை தொடர்புகொண்ட போலி சாமியார், தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு உங்களது தோஷம் முழுமையாகக் கழியவில்லை அதற்கு நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி சங்கிலியை கழற்றி பூஜை அறையில் துணியில் மறைத்து வைத்து பூஜை செய்யுங்கள்.