இந்தியாவின் பண்டைய வரலாற்றில் அர்த்தசாஸ்திரம், ராமாயணம், மகாபாரதம் தொடங்கி பல்வேறு பதிவுகளில் மலைக்க வைக்கும் அளவுக்கு யானைகள் பற்றிய குறிப்புகளை காண முடிகின்றன. இலக்கியப் பிரதிகள் தொடங்கி பிரிட்டிஷாரின் குறிப்புகள்வரை எல்லாவிடங்களிலும் கம்பீரமான இடங்களில் யானைகள் உள்ளன. வீரத்தின் அடையாளம் யானைகள் என கருதப்பட்டதில் வியப்பேதுமில்லை.
அரசர்களுக்கு யானைகள் அவசியம் என்பதால் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யானைகளைப் பாதுகாப்பதற்காகவேனும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவேண்டியிருந்தது. ஆக, யானைகளுடனான அரசர்களின் உறவு என்பது தவிர்க்கவியலாதபடி அமைந்தது. யானைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன்மூலம் அரசர்கள் போர்க்களத்தில் வெற்றிபெற முடிந்தது. அதனாலேயே கதைகள், பாடல்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என அனைத்திலும் அரசர்கள் யானைகளுக்கு முக்கிய இடம் கொடுத்தனர்.
தற்போது யானைகளுக்கு நாம் மதிப்பளிக்கிறோமா? மதிப்பளிக்கக்கூட வேண்டாம் பாதுகாக்கவேனும் செய்கிறோமா என்றால் இல்லை அதுதான் பதில். கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் 2016 ஜுன் 19ஆம் தேதி மகாராஜா என்னும் ஒரு காட்டு யானை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர் நிலங்களை சாப்பிட்டு வந்தது.
அது ஏன் ஊருக்குள் வந்து பயிர்களை சாப்பிட்டது ( உண்மையில் யானையா ஊருக்குள் வந்தது) என்பதை யோசிக்காமல், அதனை பிடிக்க ‘ மிஷன் மதுக்கரை மகாராஜா’ என்ற நடவடிக்கையின் மூலம், நான்கு கும்கி யானைகளின் உதவியோடு, மகாராஜா என்ற அந்த ஆண் யானையை வலுக்கட்டாயமாகப் பிடித்து வனத்துறையினர் லாரியில் ஏற்றினர்.
அங்கிருந்து பல மணி நேரப் பயணங்களுக்குப் பின்னர், டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு முகாமில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் மகாராஜா அடைக்கப்பட்டது. திடீரென மகாராஜா யானை 2016 ஜுன் 22ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். யானையின் இறப்பிற்கு அதிகளவு மயக்க மருந்து செலுத்தியது காரணம் என விலங்கியல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். அதற்கு கால்நடை மருத்துவர்கள் அந்த யானை, கூண்டின் கம்பிகளில் தொடர்ந்து பலமாக முட்டியதால், தலையின் எலும்புகள் நொறுங்கி இறந்துவிட்டதாக உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியிட்டனர்.
கேரளாவில் வீடுகளில் வளர்க்கும் அளவுக்கு யானை - மனித பந்தம் அதிகம். ஆனால் அங்கும் தொடர்ச்சியாக யானைகள் கொள்ளப்படுகின்றன.கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்றது. 2020 மே 30ஆம் தேதி பாலக்காடு பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் காட்டு யானை ஒன்று இறந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அலுவலர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டவுடன், அந்தத் தகவல் பொதுமக்களின் நெஞ்சை உலுக்கியது.
காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக வைத்துவிட்டு சென்றுள்ளனர். பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தவில்லை.
காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க, யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துச் சென்று, காட்டு யானையை மீட்டனர். ஆனால், அந்த யானை உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில் இறந்தது கர்ப்பிணி யானை எனவும் இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை பிரசவிக்கும் நிலையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.