தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 10:24 AM IST

Updated : Sep 16, 2023, 2:41 PM IST

ETV Bharat / state

"தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" - ஈபிஎஸ் ஆவேசம்!

EPS speech in Anna 115th birthday celebration: போர் யுத்தம் நெருங்கி விட்டது. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என நம்புவோம், இல்லையென்றால் தமிழகத்தை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Edappadi Palaniswami
எடப்பாடி பழனிச்சாமி

EPS Speech

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின் எடப்பாடி பழனிசாமி, பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

அதைத் தொடர்ந்து, மேடையில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி, "அடித்தட்டு மக்களுக்கு அனைத்து திட்டங்களும் போய்ச் சேர பாடுபட்டவர் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஏழை எப்போது சிரிக்கிறானோ அப்போது தான் நாடு நலம் பெறும் என்றார். தற்போது அண்ணாவுடைய பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம்.

இன்றைக்கு ஆட்சியாளர்கள் திமுக 2½ ஆண்டு காலத்தில் என்ன செய்தார்கள்?. நம் ஆட்சியில் எந்த நன்மையும் நடக்கவில்லை என்கிறார்கள். 2011 முதல் 2021, 10 ஆண்டு காலம் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டம் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை அதிமுக உருவாக்கியது. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். ஆயிரக்கணக்கான திட்டம், மக்களுக்குப் போய் சேர்ந்தது.

மேலும் அதிமுக ஆட்சியில் தான், 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. 7.5% இட ஒதுக்கீடு பெற்று அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியது அதிமுக ஆட்சி. ஏழைகள் இல்லாத சமூகம் உருவாக்க வேண்டும் அதுவே லட்சியம், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ கிளினிக் திறந்தது அதிமுக, அதற்கு மூடு விழா செய்தது திமுக.

இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி. ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல். தமிழகத்தில் 7 சட்டக் கல்லூரி, 4 பொறியியல், 4 கால்நடை ஆராய்ச்சி கல்லூரி கொண்டு வந்துள்ளோம். 100க்கு 32 பேர் தான் உயர் கல்வி படித்து வந்தார்கள். ஆனால் தற்போது அம்மாவின் சாதனைகளால் 100க்கு 52% பேர் படித்து வருகிறார்கள் என தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 75 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அதிக நீளமான தார்ச் சாலைகளை அமைத்த மாநிலம் தமிழ்நாடு, மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தது அதிமுக அரசு. சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்களுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டீர்கள். தாலிக்குத் தங்கம் திட்டம், பெண்கள் திருமண வயதை அடையும் போது கொடுத்து ஒளியேற்றியது அதிமுக.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, ஏழை மாணவர்கள் மற்றும் அடித்தட்டில் வாழும் மாணவர்கள் மடியில் மடிக்கணினி தவழ விட்ட அரசு அதிமுக. இதில் ஒரு திட்டத்தையாவது நீங்கள் கொடுத்தீர்களா?. மருத்துவ காப்பீடு திட்டம் 2 லட்சம், அதை 5 லட்சமாக உயர்த்தியது அதிமுக. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அனைத்து மாவட்டத்திலும் பிரச்சனைகளை கேட்டு அதனை நிகழ்த்திக் காட்டினோம்.

அம்மா முழு உருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்தோம். நம்மை உருவாக்கிய தலைவர்களுக்கு மரியாதை செய்தோம். மத்திய உள்துறை அமைச்சர் கலைவானர் அரங்கம் அழைத்து வந்து 63 ஆயிரம் கோடிக்குத் திட்டம் துவக்கி வைத்தோம். மெட்ரோ ரயில் 118 கி.மீ அடிக்கல் நாட்டினோம். இவ்வளவு செய்துள்ளோம் ஒன்றுமே செய்யவில்லை என்கிறார்கள். பொம்மை முதலமைச்சர் 2½ வருடத்தில் என்ன செய்திருக்கிறீர்கள். தேர்தல் அறிக்கை 520 கொடுத்தீர்கள், 100% முடித்ததாக சொல்லியுள்ளார், எங்கப்பா முடிச்சீங்க!.

தமிழ்நாட்டில் போதை அதிகரித்துவிட்டது, எங்கு ஒழித்தீர்கள். தினந்தோறும் கொலை, விடியா திமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் பெருகி விட்டது. பொம்மை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. போலீசுக்கே பாதுகாப்பு இல்லை, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என நாட்டு மக்கள் உணர வேண்டும். திமுக ஏவல் துறையாக காவல்துறை உள்ளது. அதிமுக ஐடி பிரிவில் குறைகளைச் சுட்டிக்காட்டினால் பொய் வழக்குப் போடுவது, அதிமுக ஆட்சியில் நாட்டிலேயே அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு.

அனுமதி கொடுத்து முழு பாதுகாப்பு கொடுத்தோம். நீங்கள் அப்படியா செய்கிறீர்கள்? அதிமுக கூட்டம் என்றால் நடுங்குகிறார் ஸ்டாலின். எந்த வழக்குப் போட்டாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், தில்லு திராணி தெம்பு அதிமுகவிற்கு உள்ளது. ஆர்.எஸ்.பாரதி ஒரு வழக்குப் போட்டார் அந்த வழக்கு நீதிமன்றத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லிட்டாங்க, வழக்குப் போட்டவர் மேல் முறையீடு செய்யவில்லை, லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்கிறது. காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.

இந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது. இந்த ஆட்சி வந்த பிறகு, உழைக்கும் திறனற்ற முதியவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை கேட்டு கோரிக்கை வைத்தார்கள். 110 விதியின் கீழ் தகுதியான முதியோருக்கு முதியோர் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு கொடுத்தோம். அதை திமுக நிறுத்தி விட்டது, இது தான் திராவிட மாடல் ஆட்சி.

கரோனாவால் நாடே ஆடிப் போயிருந்தது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது தமிழ்நாடு, அந்த காலகட்டத்தில் வருமானம் இல்லை, ஆனால் அதிமுக எல்லா குடும்ப அட்டைக்கும் 1000 ரூபாய் வழங்கியது. விலையில்லா அரிசி, சர்க்கரை வழங்கி 11 மாத காலம் நிறைவேற்றிக் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் தான் அதிக பாலம் கட்டிக் கொடுத்தோம், பல்லாவரம் பாலம்கூட நாம் தான் கட்டிக் கொடுத்தோம்.

திமுக எந்த புதிய திட்டம் கொண்டு வந்து திறந்தீர்கள், கலைஞருக்கு மணி மண்டபம், எழுதாத பேனாவிற்குப் பேனா நினைவுச் சின்னம், நூலகம் அமைத்திருக்கிறீர்கள். எழுதாத பேனா எங்கு வச்சா என்ன 80 கோடியில் தான் வைக்கணுமா?. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் அப்போது பேசினார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று, ஆனால் இன்று மின் கட்டணம் 12லிருந்து 50 வரை உயர்ந்திருக்கிறது. 520 அறிவிப்பில் மாதா மாதம் மின் கட்டணம் என சொன்னீர்கள் செய்தீர்களா?.

சொத்து வரி 1800 சதுர அடி இருந்தால் 100% வரி செலுத்த வேண்டும். கடைக்கு 1000 வரி அதிமுக ஆட்சியில் இருந்தால் திமுக ஆட்சியில் 2000 கட்ட வேண்டும். சொத்துக் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் என எதையும் விட்டு வைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் 4 லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் வைத்து விட்டு போய்ட்டாங்க, அதற்கு நிதி குழு அமைத்தார்கள். 2011ல் அம்மா ஆட்சி வருவதற்கு முன், திமுக ஆட்சியில் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அதைச் சேர்த்து தான் 4.15 லட்சம் கோடி கடனானது.

கரோனா காலம் கடுமையான கால கட்டம், 60 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு, கரோனாவிற்கு 40 ஆயிரம் கோடி - 1 லட்சம் கோடி செலவிட்டோம். இதையெல்லாம் சேர்த்து தான் 4.15 லட்சம் கடன். ஆனால் 2.73 லட்சம் கோடி கடனை திமுக 2½ வருடத்தில் வாங்கியுள்ளீர்கள், இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். பொம்மை முதலமைச்சர், திறமையில்லாத முதலமைச்சர், திட்டம் அறிவிப்பார் குழுவும் அறிவிப்பார், திமுக அரசு இல்லை குழு அரசு, இன்றைக்கு இந்த ஆட்சி எப்ப போகும் என அரசு ஊழியர்கள் சொல்லுகிறார்கள்.

அலங்கோல ஆட்சி நடக்குது, அகவிலைப்படியை மத்திய அரசு எப்போது உயர்த்துகிறதோ அப்போதெல்லாம் அதிமுக உயர்த்தியது. ஆனால் திமுக அதனைக் கொடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதி கொடுத்தாங்க பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்துவோம் என சொன்னாங்க. ஆனா படித்தவர்களையும், பாமர மக்களையும் ஏமாற்றியது திமுக. அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது. முன்பு ஒரு மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் போதும், இப்போது திமுக ஆட்சியில் 5000 கூடி போய் விட்டது.

அதைப் பற்றிக் கவலைப்படாதவர் பொம்மை முதலமைச்சர். விலைவாசி 40% உயர்ந்து விட்டது. விலை வாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டு ராஜா வீட்டை விட்டு வெளியில் வர மாட்டார். மந்திரியிடம் மக்கள் எப்படி வாழ்கிறார்கள். மழையெல்லாம் நல்ல பொழிந்தது என்பார். அதுபோல், இப்போது உள்ள முதலமைச்சருக்கு நாட்டில் நடப்பதே தெரியவில்லை, மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை.

பால் உற்பத்தி குறைந்து விட்டது, 40 லட்சம் லிட்டர் தயாரிக்கப்பட்டது, தற்போது 15 லட்சம் லிட்டர் தான் விநியோகம் செய்யப்படுகிறது. சரியான நிர்வாகம் இல்லாததால் டெங்கு பரவி வருகிறது, ஆகையால் மக்களைக் காப்பாற்ற கேட்டுக் கொள்கிறேன். சளிக்கு போனால் வெறி நாய்க்கடி ஊசி போடுறாங்க, இப்படி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவ துறையே நாசமா போச்சு, சந்தர்ப்ப சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.

எந்த மருத்துவமனையிலும் மருந்து இல்லை, ஆட்களை மாற்றினால் மருந்து எப்படி வரும். அமைச்சர் உத்தரவு போட்டா தானே வரும். திமுக உடைய அமைப்பாளர் ஆர்.எஸ்.பாரதி நங்கநல்லூர் கூட்டுறவுச் சங்கத்தில் தலைவராக இருந்த போது 1996 - 2001 பல்வேறு முறைகேடு நடைபெற்றது. இவர் உத்தமர் போல பேசுவார். அதிமுக ஆட்சி வரும் போது இது தூசி தட்டி எடுக்கப்படும். இலாகா இல்லாத அமைச்சர் உள்ளே இருக்கிறாரே, பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கினாரா, இல்லையா?.

பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு கோடி பாட்டிலுக்கு 10 கோடி 30 நாளுக்கு 12 மாதத்திற்கு 3600 கோடி வருவாய் எதோ குடும்பத்திற்கு போய்ட்டு இருக்குது. சுமார் 3000 பார்களுக்கு டெண்டர் விடவில்லை. ஒரு குடும்பத்திற்குப் போகிறது வருவாய் இழப்பு ஏற்படுகிறது, முறைகேடாக நடைபெற்ற பாரில் கலால் வரி செலுத்தாமல் முறைகேடு, முன்னாள் அமைச்சர் 13 பேர் மீது வழக்கு நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுச் சரியான ஆதராங்களை சொல்லாததால், விடுதலை ஆகி வெளியில் வந்தார்.

நீட் தேர்வை 2010ல் கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ் அரசாங்கம் தான். பிடிஆர் ஆடியோவில் அவர் பேசியது, 30 ஆயிரம் கோடி உதயநிதியும், சபரீசனும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். ஊழல் செய்வது இந்த ஆட்சியின் நிலை. ஊழல் செய்து கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி. ஒரு சிலர் இந்த கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். திமுகவோடு சேர்ந்து உழைப்பால் நிறைந்த கூட்டம் அதிமுக ஒடுக்க முடியாது. 520 அறிவிப்புகள் கொடுத்து விட்டு 100% நிறைவேற்றி விட்டோம் என்றார்.

பொய் பேசுவதற்கு நோபல் பரிசை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என கூறி நிறைவேற்றாத திட்டங்களை பட்டியலிட்டார். திறந்து வைப்பது தான் இந்த ஆட்சியின் சிறப்பு, நாம் பெற்ற பிள்ளைக்கு இவர் பெயர் வைக்கிறார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும், தமிழ்நாடு காப்பாற்றப் பட வேண்டும் என்றால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியம், 40 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும்.

போர் யுத்தம் நெருங்கி விட்டது, எதிரிகள் புற முதுகைக் காட்டும் அளவிற்கு பணிகள் இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வரும் என நம்புவோம். இல்லையென்றால் தமிழகத்தை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயலாளர் காலில் விழுந்த சட்டத்துறை அமைச்சர்: வைரலாகும் வீடியோ!

Last Updated : Sep 16, 2023, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details