அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தம் ஒவ்வொரு விவகாரங்களிலும் ஒலிக்க தொடங்கியுள்ளது. பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ், வழக்கு நிலுவையின் காரணமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது.
சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் ஓபிஎஸ்சையும் கட்சியில் இருந்து நீக்கியதை பாஜக ரசிக்கவில்லை. ஆனால் ஓபிஎஸ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து, ஈபிஎஸ் அணியினர் பொதுக்குழுவில் ஓபிஎஸ்சை நீக்கினர். பாஜகவின் முடிவுகளுக்கு ஏன் அதிமுக கட்டுப்பட வேண்டும் என்பதற்கு சில காலங்கள் பின்நோக்கி செல்ல வேண்டும்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் "குஜராத்தை சேர்ந்த மோடியா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்த லேடியா" என்று கூறிய ஜெயலலிதாவின் கட்சி தான் அதிமுக. பாஜக கொண்டு வந்த நீட் உள்ளிட்ட அனைத்து மசோதாக்களையும் எதிர்த்து அரசியல் செய்தவர் ஜெயலலிதா. 2016ஆம் ஆண்டு 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றது.
"கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு" என்று உணர்ந்து கொண்டேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு அதிமுகவின் பாஜக எதிர்ப்பு என்பது தலைகீழாக மாறிவிட்டது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓபிஎஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
சில மாதங்களில் சசிகலா தரப்பின் நிர்பந்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். முதலமைச்சராக பதவியேற்கும் சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டார். சிறைக்கு செல்லும் போது, அப்போது மூத்த அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்து சென்றார். அன்றில் இருந்து சசிகலா சிறை தண்டணை, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு போன்ற விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என்றும் கூறப்பட்டது. ஜெயலலிதா எதிர்த்த நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஈபிஎஸ் அனுமதியளித்தார். இதன் மூலம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி வைத்தது. இதில் அதிமுக தோல்வியை சந்தித்த போதிலும் பாஜக உடனான கூட்டணி சுமூகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தம் தொடங்கியது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் பிரிந்த போதிலும் பாஜகவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். குறிப்பாக குடியரசு தலைவர் தேர்தலில் இரண்டு தரப்பும், பாஜக வேட்பாளரை தான் ஆதரித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார். இதில் அரசியல் பேசவில்லை என ஈபிஎஸ் கூறினாலும், தான் ஒற்றை தலைமை ஆக வேண்டும் என பேசிய தகவல் வெளியாகியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் வரவேற்றனர். இதில் "அனைவரும் ஒன்று சேருங்கள்" என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் வந்த அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் விருப்பம் தெரிவிக்கவில்லை.