துன்பத்தில் துவண்டு கிடக்கும் மக்கள் அதிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் தலைவரை காலங்காலமாக தேடுவது தொடர்கதைதான். தமிழ்நாடு அரசியல் சூழலும் இதற்கு விதிவிலக்கானதல்ல. அத்தகைய ஒரு தலைவராக அரியணையேற தமிழ்நாடு முதலமைச்சரும், அஇஅதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்.
பச்சைத் துண்டு தலைப்பாகை, மடித்துக்கட்டிய வேட்டி எனப் புயல் மழையால் கடும் பாதிப்பைச் சந்தித்த வேளாம் நிலங்களின் சேற்றில் இறங்கி வேளாண்குடி மக்களின் கோரிக்கையை கேட்டு அறிகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடலூரிலிருந்து தொடங்கி நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி டெல்டா வேளாண்மை பெருநிலப்பரப்பில் நிவர், புரெவி புயல்களால் கடும் பாதிப்பை ஏற்படுத்திய பகுதிகளுக்கு நேரடியாக களத்திற்குச் சென்று முதலமைச்சரே ஆய்வுசெய்தார்.
அமைச்சர்கள் புடைசூழ, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் அலுவலர்கள் பட்டாளத்தோடு விரைந்து கள ஆய்வு மேற்கொண்டு, சேதாரங்களின் விவரங்களைச் சேகரித்தார். சேறும் சகதியுமான வயல்வெளிகளில் சிறிதும் தயக்கமுமின்றி இறங்கி, அழுகிய பயிர்களைக் கையில் எடுத்து ஆராய்ந்தார். இவை எல்லாம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை மறுக்க முடியாது தான்.
அதே நேரத்தில், 'நான் ஒரு விவசாயி' எனத் தன்னைப் பெருமையோடு பறைசாற்றிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021 தேர்தல் திருவிழாவில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
2018ஆம் ஆண்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு முன்னரும், பின்னரும் இத்தகைய நேரடிக் கள ஆய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டதில்லை.
கஜா புயலானது, தஞ்சை - திருவாரூர் - நாகை உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் தாக்கி, பேரழிவை விதைத்துவிட்டுச் சென்றது. அதன் வடுக்கள் இன்னும் அங்கு காணப்படுகிறது.
அதிலிருந்து பாடம் கற்ற ஈபிஎஸ்ஸின் தற்போதைய மாற்றம் நடவடிக்கை முந்தைய பயணத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. அந்த மாற்றம்தான் எதிர்க்கட்சிகளைப் புருவம் உயர்த்தவைத்துள்ளது.
விவசாயி என்னும் நான்!
திமுகவின் தற்போதைய நகரத்தன்மையுடைய தலைமைக்கு எதிரான பின்தங்கிய கிராமப்புறத்திலிருந்து அரசியலில் நிலைப்பெற்ற ஒருவராகத் தன்னை எடப்பாடி பழனிசாமி வேறுபடுத்திக் காட்டினார். 'நான் ஒரு விவசாயி' என்றும் பெருமையோடு கூறிக்கொள்ளும் அவர், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க செயலை செய்துகாட்டி தன்னை வேளாண்குடி பாதுகாவலனாகப் பறைசாற்றிக்கொண்டார்.
அறுவடைக்குத் தயாரான நெல் பயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் கதிர் அரிவாளோடு அவர் நெல்லறுத்த காட்சியே இதற்குச் சாட்சி என்று கூறலாம்.
“அடிப்படையில் நான் ஒரு விவசாயி. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? ஸ்டாலின்” என்ற எடப்பாடி பழனிசாமி, 'பதநீர் டேஸ்டாக இருக்கிறதே, இதில் சர்க்கரை ஏதும் போட்டீர்களா' என்று ஸ்டாலின் பதநீர் கொடுத்தவர்களிடம் கேட்டதைச் சுட்டிக்காட்டினார்.
"எடப்பாடி பழனிசாமி தன்னை அவரது இயல்பிலேயே வெளிப்படுத்துகிறார். தான் ஒரு விவசாயி என்று திட்டமிட்டு காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு இல்லை. விவசாய குடும்பத்திலிருந்து வந்த அவர் மற்ற தலைவர்களைப் போலல்லாமல் தனது வேர்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.