சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (ஜன.11), எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருகம்பாக்கம் பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், "விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும். அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும். அதனால்தான் நான் சொன்னேன்; நான் ஓடி, ஒளிய மாட்டேன், பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு பெண் காவலர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடனே எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4-ன் கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சிகளை காவல் ஆய்வாளர் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின் குமார், ஏகாம்பரம் ஆகியோர் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் காலையே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
புகார் கொடுத்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 72 மணி நேரத்தில் அவர்களைக் கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா? எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை, இதுபோன்ற புகாரில் அலைக்கழித்த ஆட்சிதானே அ.தி.மு.க. ஆட்சி. இந்த அரசைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.