தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி; ஜன 8-இல் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! - இயக்குனர் அறிவொளி

School Education Department: ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் பள்ளிகளில் தூய்மைப்பணி செயல்பாடுகளை ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை மேற்கொண்டு, அதன் விவரத்தை தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

tn School Education
பள்ளிக்கல்வித்துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 4:44 PM IST

Updated : Jan 4, 2024, 5:11 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, கழிவு மேலாண்மை, மறுசுழற்சி முறைகள், நெகிழி பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கைக்கு உகந்த பொருள்களை பயன்படுத்துதல், பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகிற ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பள்ளித்தூய்மைப் பணி செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து, கரும்பலகை பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்தல்.

ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல். பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல்.

புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல். காலை, மதிய உணவு திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல்.

பள்ளி வளாகத்தில் நீர் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தை மேம்படுத்துதல், அனைத்து வகுப்பறைகளும் சுத்தம் செய்து, பள்ளியில் உள்ள கட்டடங்களும், வளாகமும் தூய்மையாக மிளிரச் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தல் கூடாது.

பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் திடக்கழிவுகளை ஒப்படைத்தல். தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திட வேண்டும். இதனை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியத்தினைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலக முதலீட்டாளர்கள் மாநாடு; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

Last Updated : Jan 4, 2024, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details