சென்னை: தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாட்கள் ஒன்று சேர வேண்டும் எனவும், தங்களுக்குரிய உரிமைகளை தெரிந்து கொண்டால் தான் இந்த திட்டம் சீரான முறையில் நடக்கும் என அடித்தள ஆட்சியியல் நிறுவனத்தின் தலைவர் குரு சரவணன் தெரிவித்துள்ளார்.
அடித்தள ஆட்சியியல் நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சில கிராம பஞ்சாயத்துகளுக்கு சென்று மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு குறித்து கள ஆய்வு செய்தது. இதுகுறித்து அடித்தள ஆட்சியியல் நிறுவனத்தின் தலைவர் குரு சரவணன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி புரிபவர்கள் காலையில் வேலைக்கு வந்தவுடன் எந்த மாதிரியான பணிகள் அன்று செய்ய வேண்டும் என்பதை சம்பத்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகிகள் எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.
’பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் அந்த குறிப்பிட்ட பஞ்சாயத்து தலைவரோ அல்லது செயலாளரோ காலையில் வேலை நடக்கும் இடத்திற்கு வருவதில்லை. மேலும் அவர்களுக்கு தெரிந்த அல்லது விருப்பமான நபர்களை தற்காலிகமாக நியமித்து பணியாளர்களுக்கு குறிப்பிட்ட வேலை கொடுக்கும் படியும் அவர்களை கண்காணித்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு,
இந்த திட்டம் சார்ந்த அலுவலர்கள் இதில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களை சார்ந்தவர்களுக்கு பணித்துறை பொறுப்பு வழங்குகிறார்கள்.
இது மக்களிடத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் அதிகாரிகள் அவர்களுக்கு கருணை காட்டுவது போலவும், நீங்கள் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்பது போல மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் எனக் கூறிய அவர், மக்களுக்கு இந்த 100 நாட்கள் திட்டத்தில் தங்களுடைய உரிமைகளை பற்றி தெரியவில்லை என்றார்.
சில கிராம பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தலைவர்கள் தங்களுக்கு எந்த கிராம மக்கள் வாக்குகள் செலுத்தவில்லையோ அவர்களை புறக்கணித்து இந்த திட்டத்தில் அதிக நாட்கள் வேலை கொடுப்பதில்லை என்ற செய்தி வெளிவருகிறது?
இது போன்ற சம்பவங்களை பணியாளர்கள் எதிர்கொள்ளும்போது, அவர்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள், பணித்துறை பொறுப்பாளர்களிடம் இது குறித்து பேசுகிறார்கள். இதைத் தாண்டி மக்களிடம் இந்த திட்டம் தொடர்பான அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கூட தெரிவதில்லை. மேலும் அதிகாரிகளை பணியாளர்கள் சந்திக்கவும் மாட்டார்கள். எனவே, யாரிடம் புகார் அளிப்பது என்பது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
ஒரு சில கிராம பஞ்சாயத்துக்களில் 100 நாட்கள் வேலை திட்டத்தை தவிர கிராமம் சார்ந்த வேறு பணிகளுக்காக (உதாரணமாக சாலை வசதி) பஞ்சாயத்து தலைவர்களை அணுகும்போது, அவர்கள் மக்களின் குறைகளுக்கு செவி சாய்க்க மறுக்கிறார்களா?
இதற்கு முக்கியக்காரணம் அதிகாரப் பகிர்வின்மை இல்லாமை. மக்கள் பங்கேற்புடன் திட்டம் தயாரிப்பதில்லை. ஒரு கிராம ஊராட்சியில் மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால், அவர்களே முடிவு எடுக்க முடியும். மேலும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் அட்டை வைத்திருக்கும் நபர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குறையைச் சொன்னால், அந்த கிராம ஊராட்சி அதனை தீர்த்து வைக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் உண்மையில் பணியாளர்கள் வேலை செய்கிறார்களா?