தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2023, 9:05 PM IST

ETV Bharat / state

"மின்துறை அஜாக்கிரதையால் 7 ஆண்டுகளில் 89 யானைகள் மின்சாரம் தாக்கி பலி" - உயர் நீதிமன்றம் கண்டனம்!

மின்சாரத்துறை சரியாக நடவடிக்கை எடுத்திருந்தால் கடந்த 7 ஆண்டுகளில் 89 யானைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்காது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வன விலங்குகள் நலனில் மாநில அரசு ஏன் அக்கறை செலுத்துவதில்லை? என்றும் கேள்வி எழுப்பியது.

Elephants
மின்துறை

சென்னை: தமிழகத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று(மார்ச் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர்கள் முரளிதரன் மற்றும் வழக்கறிஞர் சொக்கலிங்கம் தரப்பில், "தருமபுரி மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியானது. அதனையடுத்து உயிர் தப்பிய இரு குட்டி யானைகளையும், யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்ததது. ஆனால், இரு குட்டி யானைகளையும் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானைக்குட்டிகள் தற்போது எங்கிருக்கின்றன? என்பது தெரியவில்லை, உயிருடன்தான் இருக்கின்றனவா? என்பதும் தெரியவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தற்போது இரு யானை குட்டிகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்றுடன் சேர்ந்துள்ளதாகவும், இது சம்பந்தமான புகைப்பட ஆதாரங்களுடன் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பின்னர், மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மின்சாரத்துறையின் அஜாக்கிரதையால் விலங்குகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது கவலையளிக்கிறது என்றும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.

மின்சாரத்துறை சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், கடந்த 7 ஆண்டுகளில் 89 யானைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்காது என்றும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், வன விலங்குகள் நலனில் மாநில அரசு ஏன் அக்கறை செலுத்துவதில்லை? - விலங்குகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாமல் புதிய சரணாலயங்களை மட்டும் திறந்து வைப்பதில் கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தனர்.

மின்சாரத்துறை கவனமாக இருந்தால் வன விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும், ஆனால் நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக ஏப்ரல் 19ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: Elephant Whisperers Hero: "ஒரே நாளுல எங்கள பிரிச்சுட்டாங்க" யானை தகப்பனின் கண்ணீர் கதை...

ABOUT THE AUTHOR

...view details