தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2021, 10:38 PM IST

ETV Bharat / state

பெருந்தொற்று நெருக்கடிக்கு இடையில் வாக்கு எண்ணிக்கை; கட்டுப்பாடுகள் என்னென்ன!

மாநிலத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்கவும் தேர்தல் ஆணையம் ஆலோசித்துவருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைமுறை
counting procedure

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும், தற்போது கரோனா தொற்றின் 2ஆம் அலை தீவிரம் அடைந்துவருகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெருந்தொற்றிற்கு இடையே நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்?

வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில், கரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரிக்கிறது. பெருந்தொற்று நெருக்கடிக்கு இடையே வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்ற ஐயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை தடையின்றி நடைபெறும் என்றார்.

ஏப்ரல் 6ஆம் தேதி பதிவான வாக்குகள் 75 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படவுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சாவி கொடுக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் முகவர்கள் (Booth Agents) சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ளது. வாக்கு எண்ணிக்கை வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும். இம்முறையும் வாக்கு எண்ணிக்கைக்கான நடைமுறைகள் 8 மணிக்குத் தொடங்கினாலும், காலை 8.30 மணிக்கே வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டும், தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

எத்தனை சுற்றுகள்

வழக்கமாக, வாக்குகள் 14 சுற்றுகள் எண்ணப்படும். ஆனால், தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக, 18 முதல் 30 சுற்றுகள் வரை வாக்குகளை எண்ணும் வகையில் மேசைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தத் திட்டமிடப்பட்டதாக, அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் எடுத்துரைத்ததோடு, கருத்தும் கேட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை அமல்படுத்தக்கூடாது என்றும், சுற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது பணியில் இருக்கும் முகவர்கள் கடும் சோர்வு அடைவர் என்றும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முடிவுகள் காலதாமதம்?

இதன் காரணமாக, வழக்கமான நடைமுறையையே பின்பற்றி, வாக்கு எண்ணிக்கையை இரவு 12 மணிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பெருந்தொற்று நெருக்கடி என்பதால் வாக்குகள் எண்ணப்பட்டு, முதல் சுற்று முடிவுகள் தெரிய வர காலை 9 மணி வரை ஆகலாம்.

வாக்கு எண்ணிக்கைத் தொடர்பாக, சுகாதாரத் துறையுடன் தேர்தல் ஆணையம் விரிவான ஆலோசனையை நடத்தியுள்ளது. ஆலோசனைக்குப் பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்; அதேபோன்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் உள்ளிட்டவை கட்டாயம் உடன் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்?

முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை கட்டாயம் அணிய வேண்டும்; ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் சானிடைஸ் செய்து வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரம் எடுத்து வரப்படும்; அதே போல் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும் முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் வசதி ஏற்படுத்தப்படும். தேவைபடும் பட்சத்தில், அவற்றை உடனே உபயோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், தமிழ்நாடு அரசால் அனுமதி கடிதம் வழங்கப்பட்ட ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பாக ஓரிரு நாள்களில் தெரியவரும்.

பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் காவலர்கள்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, சுமார் 50 ஆயிரம் காவல்துறையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொது மக்கள், அரசியல் கட்சியினர் கூட தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

'பூத் பாஸ்' இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு தேவையின்றி அதிகளவில் அரசியல் கட்சியினர் கூடவும், பட்டாசு வெடித்து கொண்டாடவும் தடை விதிப்பது குறித்தும் டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ உள்ளிட்டோர் விரிவாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மஹாவீர் ஜெயந்தி நாளான மே 1, வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆகிய இரு நாள்கள் டாஸ்மாக் கடைகள் விடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்ட-ஒழுங்கு பிரச்சனை குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட, இம்முறை முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.

பதிவான வாக்குகள், மின்னணு இயந்திர வாக்குகள் இடையே வித்தியாசம் வரும்பட்சத்தில் விவிபேட் இயந்திர வாக்குகளை எண்ண நேரிட்டால் மேலும் காலதாமதம் ஆகவாய்ப்பு இருக்கிறது. சரியான, குறித்த நேரத்தில் வாக்குகளை எண்ண நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆர்வத்தில் வெளியே ஒன்று கூடாமல், பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக முடிவுகளை தெரிந்து கொண்டால், கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ABOUT THE AUTHOR

...view details