உலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையானது சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 75 மரங்களில் பெரும்பாலானவை வயதான மரம் என்பதால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றினால் மீண்டும் துளிர்ப்பதற்கு 20 முதல் 30 விழுக்காடு வாய்ப்புகள் மட்டும் இருக்கிறது.