தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் அதிமுகவின் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:14 PM IST

Updated : Sep 13, 2023, 7:56 PM IST

T Nagar Sathya: அதிமுக மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யாவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது சத்யாவிற்கு நெருக்கமான முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்

சென்னையில் அதிமுகவின் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
சென்னையில் அதிமுகவின் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடபழனி நெற்குன்றம் பகுதியில் உள்ள தி நகர் சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும், மேலும், அவருக்கு தொடர்புடைய சென்னையில் உள்ள 16 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சத்யாவிற்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் 16 இடங்கள் சென்னையிலும், கோவையில் ஒரு இடமும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 16.33 விழுக்காடு சொத்துக்கள் குவித்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த போது சத்யாவின் சொத்து மதிப்பு ரூபாய் 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் 21 சொத்துக்கள் இருந்ததாகவும், ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த போது ரூ. 16 கோடியே 44 லட்சம் மதிப்புடைய 38 அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவரும் நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும், சத்யாவிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்களின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவு துறையின் மூலம் பெறப்பட்டு அது தொடர்பாக அவர் வீட்டில் இருக்கக்கூடிய ஆவணங்கள் என்னென்ன, மேலும் அசையா சொத்து, தங்க நகையோ, பணமோ, நிலம் வாங்கிய தொடர்பான ஆவணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தி நகர் பகுதியில், ஒரே முகவரியில் அமைந்துள்ள சத்யாவின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் என்ன மாதிரியான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன, என்ன தொழிலை மேற்கொள்கிறார்கள், அதில் என்ன வருவாய் வருகிறது போன்ற விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

மேலும், சத்யாவிற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், கட்சியில் நெருக்கமாக உள்ளவர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மற்றொரு மாவட்ட செயலாளருமான வட சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிலும் சத்யாவின் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காலை முதல் சோதனை நடத்தி வருவதால் அதிமுக தொண்டர்கள் இருவரின் வீட்டு முன்பக்கம் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க:DVAC Raid: முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா வீட்டில் திடீர் சோதனை! முக்கிய ஆவணம் பறிமுதலா?

Last Updated : Sep 13, 2023, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details