சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கடந்த வாரம் அதிரடியாகச் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மாநகராட்சி, கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையின்போது பதிமூன்றரை லட்சம் கணக்கில் வராத பணமும், இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் இதில் மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் சிக்கின. எஸ்.பி. வேலுமணி தொடர்பான வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வை மேற்கொண்டுவந்தது.
346 கோடி ரூபாய் டெண்டரில் வெற்றிவேலின் ஒப்பந்தங்கள்
இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், குறிப்பாக 2014 முதல் சென்னை மாநகராட்சி, கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் தொடர்பான டெண்டர்களில் விதிகளை மீறி ஒப்பந்தம் செய்த அரசு ஒப்பந்ததாரர்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்துள்ளது. சோதனையின்போது கிடைக்கப்பெற்ற மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மூலம் இந்தப் பட்டியலைத் தயாரித்து உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளரும், மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் நேற்றுமுதல் (ஆகஸ்ட் 16) இன்று காலை வரை சோதனை நடத்தினர்.