சென்னை:ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அலுவலரான வெங்கடாச்சலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல்துறையில் பணிபுரிந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு தகவல் வந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம், வேளச்சேரியில் உள்ள அவரது வீடு, சொந்த ஊரான சேலத்தில் உள்ள வீடு என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனையை மேற்கொண்டனர்.
பறிமுதல்
விடிய விடிய நடைபெற்ற சோதனையில், ரூ. 13.5 லட்சம் பணமும், ரூ. 3 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெங்கடாசலத்தின் வீட்டில் சந்தனக்கட்டைகள் இருந்ததாதல், இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக கடந்த ஏப்ரலம் மாதம் மட்டும் அவசர அவசரமாக 60க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கிய வெங்கடாசலம், கோடிக்கணக்கில் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.
முறைகேடுகள்
2013-2014ஆம் ஆண்டுவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும், 2017,2018ஆம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராகவும் இருந்த அவர், தனது பதவிகாலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.