சென்னை ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் கரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ளது. இதுவரைலும் மொத்தம் 73 ஆயிரத்து 728 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 49, 587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் பகுதியான கண்ணகி நகரில் ஆரம்பத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அது மாநகராட்சி, சுகாதார துறைக்கு சவாலாக அமைந்தது. பலர் கண்ணகி நகரை அடுத்த தாராவி என தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கண்ணகி நகரில் சராசரியாக ஒருநாளைக்கு 10 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றது.
சென்னையில் மொத்தம் 1,979 குடிசைப் பகுதிகள் உள்ளன. அதில் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக 24 ஆயிரம் குடியிருப்புகளைக்கொண்டு இருப்பது கண்ணகி நகர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்துவருகின்றனர்.
மக்கள் அதிகமாக வாழும் கண்ணகி நகரில் ஒருவருக்கு கரோனா வந்தால் கூட மற்றவருக்கும் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு அதிகமுண்டு. இதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு முதலில் இருந்தே கண்ணகி நகருக்கு தனி கவனம் செலுத்திவந்தது.
இதையும் மீறி ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் அப்பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அடுத்தடுத்த சில தினங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு அங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தீவிரத்தன்மையை உணர்ந்த அரசு, கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த அனைவராலும் வீட்டில் தனிமைபடுத்துவதற்கு வசதி இல்லாததால் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மையத்தில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துவருகின்றது.
இதையும் படிங்க... தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா
இதுகுறித்து பேசிய தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான், "கண்ணகி நகரில் கரோனா வைரஸ் தடுப்பதற்கு மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தோம். தற்போது கண்ணகி நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 150 முதல் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. சென்னையில் முதல் முறையாக கண்ணகி நகரில் உள்ள அனைவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி 180 தன்னார்வலர்களைக்கொண்டு வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
தினமும் நான்கு மருத்துவ முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன. மிக முக்கியமாக மக்களின் ஒத்தொழைப்பு முழுமையாக இருந்தது. இதனால் நோய்த்தொற்றை பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டோம். தற்போது கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர் ஆகிய மூன்று பகுதிகளிலும் நேற்றுமுன்தினம்வரை 240 நபர்கள் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.