தமிழ்நாடு

tamil nadu

வாட்ஸ்அப் மூலம் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் விற்பனை: ஒருவர் கைது!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் விற்பனை செய்த நபரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

By

Published : Sep 1, 2020, 12:20 PM IST

Published : Sep 1, 2020, 12:20 PM IST

drugs
drugs

சென்னை மயிலாப்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் விற்பனை செய்துவருவதாக அப்பகுதி காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஐஸ் பகுதி பெரிய தெருவில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் இருவரைப் பிடித்து சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட கேட்டமைன் என்கிற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேப்பாக்கத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் ஒரு நபர் கிராம் கணக்கில் விற்பனை செய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சேப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிற்கு சென்ற காவல் துறையினர் போதைப்பொருள் விற்றுவந்த ஊழியர் ஒருவரைக் கைதுசெய்தனர்.

மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் சூட்கேஸ் ஒன்றில் இருந்த 370 கிராம் கேட்டமைன், 87 ஸ்டாம்ப் போதைப்பொருள், 33 போதை மாத்திரைகள், 11 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், ஒரு எடை போடும் இயந்திரம், 2500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. பறிமுதல்செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட ஊழியர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ்(30) என்பதும், அவர் ஒரு நபரிடம் இருந்து போதைப் பொருள்களை வாங்கி சென்னைக்குக் கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றுவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் முகமது அனீஸ் விற்பதற்கு போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மூலம் கிடைக்கும் தொடர்புகளை தனது வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்வார் அல்லது முகமது அனீஸை போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டால் அவர்களுக்கு சப்ளை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும், போதைப் பொருள் தேவைப்படுபவர்கள் நேரடியாக முகமது அனீஸ் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியும், கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்தும் போதைப்பொருள்களைப் பெற்றுவந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, முகமது அனீசுக்கு ராமநாதபுரத்தில் போதைப்பொருள் சப்ளை செய்து வரும் நபரைக் கைதுசெய்ய தனிப்படை ராமநாதபுரத்திற்கு விரைந்து உள்ளனர். மேலும் முகமது அனீஸ், கல்லூரி மாணவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து மிரட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details