தமிழ்நாடு

tamil nadu

ட்ரோன் வாடகை மையங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

By

Published : Mar 19, 2022, 10:38 PM IST

கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அமைச்சர்
அமைச்சர்

சென்னை:தமிழ்நாடு அரசின்2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். இதில் வேளாண்மையை இயந்திரமயமாக்குதல் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், "வேளாண்மையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையைக் கருவிகள் கொண்டே நிரப்ப வேண்டிய நிலைமை நீடிக்கிறது. அறுப்பதற்கும், நடுவதற்கும், களையெடுப்பதற்கும், களமடிப்பதற்கும், கனி பறிப்பதற்கும் கருவிகள் வந்துவிட்டன. இன்று, உழவுத் துறையை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று.

விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று நிகர வருவாயை அதிகரிக்க, 2022-23ஆம் ஆண்டில் 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தின்கீழ், சிறிய வேளாண் இயந்திரங்களுக்கும், கருவிகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

விவசாயக் கருவிகள் வாடகைக்கு!

மேலும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும். இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப்பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு எண்ணூறு ரூபாய் வீதம் அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

இதன்மூலம், 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமார் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு 2022-23ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயக் கருவிகளை வாடகைக்கு வழங்கி, பெண் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 736 கருவி வங்கிகள் அமைக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

ABOUT THE AUTHOR

...view details