தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2023, 11:00 PM IST

ETV Bharat / state

Dr.MGR University: 11-வது துணைவேந்தராக நாராயணசாமி பொறுப்பேற்பு!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக மருத்துவர் நாராயணசாமி பொறுப்பேற்றார்.

mgr
தமிழ்நாடு

சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் (The Tamil Nadu Dr. M.G.R.Medical University) பத்தாவது துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யன் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு, எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த நாராயணசாமி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக அண்மையில் நியமிக்கப்பட்டார். கடந்த 29ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நியமன ஆணையை மருத்துவர் நாராயணசாமியிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மருத்துவர் நாராயணசாமி இன்று (ஜூன் 1) பதவியேற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் கலையரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் மருத்துவர் நாராயணசாமி துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: Anna University: பிஇ, பிடெக் படிப்பு 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம்

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பதிவாளர் அஸ்வத் நாராயணன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் சாந்தாராம், மேஜர் ராஜா, பிரம்மானந்தம், சட்டமன்ற உறுப்பினர்களான எழிலன், கே.கணபதி மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவத்துறையில் 33 ஆண்டுகள் அனுபவம்:மருத்துவர் நாராயணசாமி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார் என தெரிகிறது. மருத்துவத் துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் நாராயணசாமி. நிர்வாகப் பணிகளில் 13 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மாநில அளவிலான அரசின் திட்டத்திற்கு தொடர்பு அதிகாரி உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியின் முதல்வராகவும், சென்னை மருத்துவக்கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை மருத்துவக்கல்லூரியின் கல்லீரல் துறையின் தலைவராக 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் பணியாற்றி இருக்கிறார். சென்னை மருத்துவக்கல்லூரியில் கல்லீரல் நிறுவனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியதுடன், அதன் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தேசிய கல்லீரல் அழற்சி ஒழிப்பு திட்டத்தில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேலும், இவர் கல்லீரல் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு கரோனா மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். மேலும், சர்வதேச அளவிலான மருத்துவக் கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து? தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு வரும் அடுத்த ஆபத்து?

ABOUT THE AUTHOR

...view details