சென்னை மதுரவாயலில் வசித்து வருபவர் செந்தில் நாதன் (30). இவருக்கு கடந்த வருடம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னி நாகநந்தினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, செந்தில் நாதன் அவரது தாய், தங்கை இணைந்து, மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை - மனைவி தற்கொலை முயற்சி; கணவர் கைது...! - தற்கொலைக்கு முயன்ற மனைவி
சென்னை: வரதட்சணை கொடுமையால் மாடியிலிருந்து கீழே குதித்து மனைவி தற்கொலை முயற்சி செய்ததையடுத்து அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் வரதட்சணை கொடுக்க முடியவில்லை என்றால் தற்கொலை செய்துகொள் எனவும், வேறு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செந்தில் நாதன் மிரட்டி வந்துள்ளார். இதேபோல், கடந்த 25ஆம் தேதி நாக நந்தினியிடம் வேறு திருமணம் செய்துகொள்ளபோவதாகவும், இனி என்னுடன் பேச வேண்டாம் என செல்போனில் செந்தில் நாதன் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் உடனடியாக வீட்டின் 2வது மாடிக்குச் சென்று மேலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது நாகநந்தினியின் இரண்டு கால்கள் உடைந்துள்ளது. இதனால் அருகிலிருந்த நபர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நாக நந்தினியை சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய செந்தில் நாதன், அவரது தாயார் வசந்தகுமாரி, தங்கை சீதாலட்சுமி ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், செந்தில் நாதனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.