சென்னை:உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கமல் ரத்ததான குழு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரத்ததானக் குழுவை தொடங்கி வைத்தார்.
பின்னர் மேடையில் பேசிய கமல்ஹாசன், "இனி என்னைப் பார்த்து அந்த கேள்வியை கேட்காதீர்கள். சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர் தான். 'விக்ரம்' படத்தின் வெற்றி எனக்கு இன்னொரு படிக்கட்டு, நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை. படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை. மக்களாட்சியில் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.
ஓட்டு எண்ணிக்கை மட்டும் அரசியல் அல்ல. ஏழையை பணக்காரராக மாற்றுவதல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் மாற்றுவது தான் அரசியல். எனக்கு வள்ளல் பட்டம் தேவை இல்லை. மனிதன் என்ற பெயர் போதும். சினிமா என் தொழில். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை.
அரசியல் வியாபாரம் இல்லை. ஆனால், அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைப் பேசினால் அவர்களுக்கு கோபம் தான் வரும். என் அரசியல் பேச்சு காரமாக இருக்கும். அதன் மூலம் மட்டுமே என்னை மிரட்ட முடியும். அதையும் செய்திருக்கிறார்கள். காலை வாரி விடுவது அல்ல, எங்கள் அரசியல்.