சென்னை:அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் முதுகலை முதலாமாண்டு படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரி முதுகலை பயிற்சி மருத்துவர்கள் 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
கலந்தாய்வை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என கடந்த 2 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் முதுகலை பயிற்சி மருத்துவர்களின் பணிச்சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கும் வகையில் கலந்தாய்வை நடத்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், மாநில அரசின் கையில் உள்ள 50 விழுக்காடு மருத்துவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மருத்துவர்கள் இல்லை
இது குறித்து மருத்துவர் ராஜ் கூறுகையில், "முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரி உறைவிட மருத்துவர்கள் கடந்த 3 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா 3ஆவது அலை வந்தால் அதனை சமாளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை.
எனவே முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். முதுகலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு அரசின் கையில் இருக்கும் 50 விழுக்காடு இடத்தை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா கிளினிக் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் மருத்துவர்களை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும். அவ்வாறு பணியமர்த்தினால் ஓரளவிற்கு எங்களின் பணிச்சுமை குறையும். இவைகளை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்" என்றார்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்