தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 12, 2020, 1:40 PM IST

ETV Bharat / state

’எடப்பாடி எத்தனை எடப்பாடிகளோ’: திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: முதலமைச்சர் பழனிசாமியின் இரட்டை வேடம் நாடு நன்கு அறிந்ததே. ‘எடப்பாடி எத்தனை எடப்பாடிகளோ’ என்று கூறுமளவுக்கு, இரட்டை வேடம் போடும் கபட நாடகம் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

dmk stalin
dmk stalin

கரோனா நோய் தடுப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படவேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவை விரைந்து நீட்டித்து அறிவிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சருக்கு பழனிசாமிக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு முதலமைச்சர் பழனிசாமி, 'ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறார்' என மிகக் கடுமையாக விமர்சித்து பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்று, மனிதக் குலமே நடுங்கி நிற்கும் கரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்க பொறுப்புள்ள முதலமைச்சராக, கடமை உணர்வுடன் செயல்பட பழனிசாமி முன்வர வேண்டும். அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்.

யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை. எல்லாம் எனக்குத் தெரியும், தானே எல்லாம் என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைதான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது. முதலமைச்சர் தன்னை சுயபரிசோதனை (Self Introspection) செய்துகொள்ள வேண்டும். அல்லது கண்ணாடி முன் நின்று சற்று பின்னோக்கிப் பார்த்து யோசிக்க வேண்டும். கூவத்தூர் முதல் கோட்டைவரை இவரது சந்தர்ப்பவாதத்தைப் பார்த்து, இவரது கட்சியினரே இவருடைய முதுகுக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

முதலமைச்சர் பழனிசாமியின் இரட்டை வேடம் நாடு நன்கு அறிந்ததே. நீட் தேர்வில் இரட்டை வேடம்; பத்து சதவிகித இட ஒதுக்கீட்டில் இரட்டை வேடம். ஹைட்ரோ கார்பனில் இரட்டை வேடம். இப்படி, ‘எடப்பாடி எத்தனை எடப்பாடிகளோ’ என்று கூறுமளவுக்கு, எல்லாப் பிரச்னைகளிலும் இரட்டை வேடம் போட்டு, கபட நாடகம் ஆடியிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

ஒடிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையிலும், பாஜக ஆளும் கர்நாடகம் முடிவெடுத்துவிட்ட பிறகும், தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? கரோனாவைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்துவிட்டால் மத்திய அரசு என்ன நினைக்குமோ என்று உள்ளூர பயம்தான் காரணம். மத்திய அரசிடமிருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்?

பதவியைக் காப்பாற்றிக்கொள்ள உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்த சுயநலத்தாலும் கோழைத்தனத்தாலும் தமிழ்நாடு இழந்த பெருமைகள் எத்தனையோ உண்டு! இப்போது உயிர்களையும் இழக்கும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தலைவர்கள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவிக்க தடை

ABOUT THE AUTHOR

...view details