தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2020, 7:43 PM IST

ETV Bharat / state

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக உள்ளபோது இடஒதுக்கீட்டில் காலதாமதமா? ஸ்டாலின்!

சென்னை: பிரதமராகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருக்கும் போது இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான கமிட்டி அமைக்க கால அவகாசம் தேவையில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

dmk stalin statement
dmk leader stalin statement about obc reservation judgement

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பில்; “இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற மருத்துவக் கவுன்சில் வாதத்தை நிராகரித்து, “மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை” என்று குறிப்பிட்டு, திறமையைக் காரணம் கூறி ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது.

அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்று நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு, நான்கு ஆண்டுகளாக, இல்லாத ஒரு காரணத்தைக் கூறி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இந்திய மருத்துவக் கழகமும், மத்திய பாஜக அரசும் கூட்டணி அமைத்து இழைத்து வந்த அநீதிக்கு ஒரு முடிவு கட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரைக்குச் செயல்வடிவம் கொடுத்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நேரத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியடைந்தது.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்,மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியும், நேரிலும், மனு மூலமாகவும் பலமுறை வலியுறுத்தினார். கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு அவைகளிலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் என, நானும் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறேன்.

மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காகக் கொண்டு வந்த சட்டங்கள், தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 69 விழுக்காடு இடஒதுக்கீடு ஆகியவற்றை முன்னிறுத்தி, உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு கோரி சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தோம்.

இந்த நிலையில் மருத்துவக் கல்வியில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கத் தயார் என, மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், இந்திய மருத்துவக் கழகம் மூலம், மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.

ஆனால், நமது வழக்குரைஞர்கள் திறமையால், மத்திய அரசு - மாநில அரசு - இந்திய மருத்துவக் கழகம் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து இட ஒதுக்கீட்டை மூன்று மாதங்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது.

இத்தீர்ப்பினைப் பெறக் காரணமாக இருந்த மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சனுக்கு சிறப்புப் பாராட்டுகளையும், அவர் உள்ளிட்ட வாதிட்ட மற்ற வழக்குரைஞர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இட ஒதுக்கீடு வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பைப் பெறுவதில் ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் ஓரணியில் நின்றதற்காக கூட்டணி கட்சிகள் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடத்தால் பண்படுத்தப்பட்ட தமிழ் மண், சமூகநீதி மண் என்பதை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது இந்தத் தீர்ப்பு. நான்கு ஆண்டுகளாக வீழ்த்தப்பட்டிருக்கும் சமூக நீதியை வழங்க மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கூடப் போதும்.

அதுவும் பிரதமராகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருக்கும் போது - அந்த நேரம் கூடத் தேவைப்படாது என்பதில் இன்னமும் கூட ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தத் தீர்ப்பினை ஏற்று - கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மாதம் வரை மத்திய அரசு காத்திராமல் உடனடியாகக் கமிட்டியை அமைத்து, மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டின்படி குறிப்பாகத் தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒப்படைக்கும் மருத்துவக் கல்வி, பல் மருத்துவம், மற்றும் மருத்துவ முதுநிலைக் கல்வி இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details