தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2019, 1:10 PM IST

ETV Bharat / state

சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்!

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் 'இனி பேனர் வைக்கமாட்டோம்' என பிரமாண பத்திரத்தை கொடுத்து சுபஸ்ரீயின் பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்து, திமுக அறக்கட்டளை சார்பாக சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், "கடந்த வாரம் ஆளும்கட்சியின் பேனர் விழுந்து சுபஸ்ரீ அகால மரணம் அடைந்திருக்கிறார். 2017ஆம் ஆண்டே பேனர் வைக்கக் கூடாது, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி பெற்றபின்தான் வைக்க வேண்டும் என வலியுறுத்திவந்தேன். ஏற்கனவே கோவையில் ரகுவை பலி கொண்டது. இப்போது சுபஸ்ரீயை பலிகொண்டது வருத்தமளிக்கிறது.

ஒரு சில பேனர்களுக்கு அனுமதி பெற்றுவிட்டு நூற்றுக்கணக்கில் அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர். சாலையை ஆக்கிரமித்து வழிநெடுகிலும் வைத்து நீதிமன்ற உத்தரவை மீறுகின்றனர்.

சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுகவினர் யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கும். இனி பேனர் கலாசாரம் இருக்கக் கூடாது. அதிமுக அரசு நினைத்தால் பேனர் வைத்தவரை உடனடியாக கைது செய்யலாம், இதை நான் அரசியலாக்கவில்லை" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details