இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ப்ளாக் காமெடி எனப்படும் கொடூர தமாஷ் பேர்வழிகளாக மாறியிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு திமுகதான் காரணம் என்று பச்சைப் பொய்யை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டுள்ள அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் முதலமைச்சரிடமும் பதில் இல்லை; அமைச்சரிடமும் பதில் இல்லை. நோயைக் கண்டுபிடிக்கவே உபகரணம் இல்லை. ஆனால், போர்க்கால நடவடிக்கையில் அரசு செயல்படுகிறது என்பது நல்ல வேடிக்கை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் அதிமுக அரசு எப்படி விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அது காட்டுகிறது. அதிமுக அரசு, கரோனா தடுப்பில் முழுமையான அக்கறை காட்டவில்லை.