தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொகுதிப்பங்கீட்டில் இழுபறி: கறார்காட்டும் 'பெரியண்ணன் திமுக' - dmk alliance with parties

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்ற செய்தியே அதிகளவில் வலம்வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாகக் களம்கண்ட திமுக அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிகவுக்கு அதிருப்தி ஏற்படாத அளவுக்கு இடங்களை வழங்கி தேர்தலில் வெற்றியைச் சுவைத்தது.

dmk constituency distribution among alliance parties
dmk constituency distribution among alliance parties

By

Published : Mar 4, 2021, 4:24 PM IST

Updated : Mar 4, 2021, 10:41 PM IST

திமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில் திமுகவின் பெரியண்ணன் மனப்பாங்கு தோழமைக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை திமுகவுடன் இரண்டு இஸ்லாமிய கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு இறுதிசெய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 18 முதல் 25 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 முதல் 5 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. மேலும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசியக் கட்சியான காங்கிரசுக்கு 2011 தேர்தலில், திமுக கூட்டணியில் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் ஐந்து தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெற்றிகாண முடிந்தது. 2016 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

இதனால் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனைப்படி 20 வரை தொகுதிகள் கொடுத்தால்போதும் எனக் கூறப்படுகிறது. முதலில் 15 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த திமுக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 23-25 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் 35 தொகுதிகள் வரை அதிகபட்சமாக எதிர்பார்க்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த மக்களவைத் தேர்தலில், தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டன. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் 12 தொகுதிகள் வரை ஒதுக்க கோரிக்கை வைப்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் உரிய மரியாதையுடன் கணிசமான தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், அதிகபட்சம் 25 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என திமுக விடாப்பிடியாக இருக்கிறது.

மதிமுகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ள திமுக தனது சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 3) இரவு நடந்துள்ளது.

இதில் மூன்று கட்சிகளும் ஒரே எண்ணிக்கையில் சீட்டுகளை பெறுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. தற்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொள்கை அளவில் திமுகவை நீண்ட காலத்துக்கு வலுப்படுத்தக்கூடிய கட்சிகளாக விளங்கும் இந்தக் கட்சிகளுக்கு அதிகமான இடங்களில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சிகளின் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இரு கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கட்சியினரிடையே ஆலோசனை நடத்தி வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்து கூட்டணியில் இருந்துவருவதாகவும், பல்வேறு தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களுக்கு திமுகவுடன் இணைந்து போராடியிருப்பதால் உரிய முறையில் தொகுதிகளை திமுக ஒதுக்கும் என நம்புவதாக கூட்டணி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

170 இடங்களுக்குக் குறையாமல் போட்டியிட்டு கடந்த முறை போல் அல்லாமல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்கிறது திமுக. நாடாளுமன்றத் தேர்தலில் உரிய எண்ணிக்கையிலான இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒதுக்கும் இடங்களைப் பெற்றுக்கொண்டு இணக்கமாக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய மூத்தப் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "திராவிடக் கட்சிகள் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பொதுவாகவே குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கத்தான் நினைப்பார்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் இதுபோன்ற நடைமுறைதான் இருந்துவருகிறது. இதனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை தரவில்லை என எடுத்துக்கொள்ள முடியாது. பொறுத்திருந்துப் பார்க்கலாம்" என்றார்.

மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், "திமுக கூட்டணியில் எழுந்துள்ள இடப்பிரச்சினைக்கு ஓரிரு நாள்களில் தீர்வு காணப்படும், இது வழக்கமாக எழும் பிரச்னைதான். கூட்டணியை இதே கட்டுப்பாட்டோடு எடுத்துச்சென்று வெற்றிபெற வேண்டும் என நினைக்கின்றனர்" எனத் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி: கூட்டணி கட்சிகள் தனி தனியாக ஆலோசனை!

Last Updated : Mar 4, 2021, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details