தமிழ்நாடு

tamil nadu

சமூகநீதியின் உறுதிமிக்க தூண் ஒன்று சாய்ந்து விட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Oct 9, 2020, 11:50 AM IST

சென்னை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில், சமூகநீதியின் உறுதிமிக்க தூண் ஒன்று சாய்ந்துவிட்டதாகவும் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த உயர்வான குரல் ஓய்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

DMK stalin
DMK stalin

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தியின் நிறுவனரும், வாழ்நாளெல்லாம் சமூகநீதிப் போராளியாகத் திகழ்ந்தவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவுடன் சமூகநீதிக் களத்தில் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த ராம்விலாஸ் பாஸ்வான் கருணாநிதியின் உற்ற நண்பர் மட்டுமின்றி - அவர் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டவர். அதேபோல் என்னிடமும் மிகுந்த நெருக்கம் காட்டி - நேசம் பாராட்டியவர்.

ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்ததற்காக நெருக்கடி நிலைமையின் போது சிறையில் அடைக்கப்பட்டாலும் - நெஞ்சுரத்துடன் முழுக் காலத்தையும் சிறையில் கழித்த தியாக சீலர்.

மத்திய எஃகுத்துறை அமைச்சராக இருந்த போது, கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு விற்கும் முடிவினைக் கைவிட்டதோடு அந்த ஆலையின் புதிய விரிவாக்கத்திற்கும், நவீனப்படுத்தவும், 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்ற முன்வந்தவர் என்பது நினைவில் நிற்கும் அவரது தமிழக நலன் சார்ந்த பணியாகும்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்டியலின - பழங்குடியின மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி - சாதித்து - தனது வாழ்நாள் முழுவதையும் அவர்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.

சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், விரைவில் வீடு திரும்பி சமூகநீதிக்காகவும் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக் குரலாகவும் விளங்கி, தொடர்ந்து பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் - அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தைத் தாக்கியிருக்கிறது.

சமூகநீதியின் உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்து விட்டது. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த உயர்வான குரல் ஓய்ந்துவிட்டது. தமிழ்நாட்டின் நலன்களுக்கு என்றும் தயங்காமல் முன்னுரிமை கொடுத்து வந்த ஒரு மத்திய அமைச்சரை நாம் இழந்து விட்டோம்.

சுருக்கமாக, ஒரு தலைசிறந்த நாடாளுமன்றவாதியை நாம் பறிகொடுத்து விட்டோம். ஆனால் அவர் ஏற்றி வைத்துப் பாதுகாத்து வந்த சமூகநீதி தீபம் என்றைக்கும் அணையாது - இந்தியத் திருநாடு முழுவதும் ஒளி வீச வைத்திட நாம் அனைவரும் சபதமேற்போம்; அவர் வழிநின்று சாதித்துக் காட்டுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details