தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2020, 2:41 PM IST

ETV Bharat / state

'கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும்' - கே.எஸ். அழகிரி

சென்னை: கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

dmk
dmk

உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக கூட்டணி தர்மத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாக கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையே இந்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளியாகும். அதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் இதைப்பற்றி பேசும்போது, ”காங்கிரஸ் இல்லையென்றால் எங்களுக்கு என்ன நஷ்டம், அவர்களுக்குத்தான் நஷ்டம். காங்கிரஸ் செல்ல வேண்டுமென்றால் செல்லட்டும்” என அழகிரியின் அறிக்கைக்குப் பதிலடி கொடுத்தார்.

கே.எஸ். அழகிரி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஜெயகுமார், ”தலையிருக்க வால் ஆடக்கூடாது, துரைமுருகன் கருத்தால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” எனக் கருத்து தெரிவிக்க, திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று பல தரப்பிலும் யூகிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அழகிரி இன்று மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ”திமுக கூட்டணியில் எந்தப் பிளவும் கிடையாது. எங்களுக்குத் தோன்றிய விஷயத்தை நாங்கள் சொன்னோம். ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனி நிலைப்பாடு உள்ளது. அதேபோல் கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். திமுக - காங்கிரஸ் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும்” என்று சர்ச்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

துரைமுருகன் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ”திமுக - காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கருத்துகளைக் கூறியுள்ளனர். ஏதாவது பிரச்னை வந்தால் திமுக தலைவர், காங்கிரஸ் தலைவர் பேசி முடிவுசெய்துகொள்வார்கள். இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்துகள் கூற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வரையும், அதன் பின்னரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். அதிமுக, திமுக கூட்டணி இடையே வேறுபாடுகள் நிறைய உள்ளது. இது மதச்சார்பற்ற கூட்டணி. இந்திய ஒற்றுமைக்காக கூட்டணி அமைத்து செயல்பட்டுவருகின்றோம். இந்தியாவில் எந்தக் கட்சியும் தனித்து நின்று வெற்றிபெற முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க:திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் - துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details